கவிதைகள்
மரணத்திற்கு பிறகு -மாரி மகேந்திரன்
நான் இன்று இப்படிதான் சாகப் போகிறேன் எனச் சொல்வதற்கு
என்னிடம் ஏதுவான எந்தவொரு காரணங்களும் இல்லை?
சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் இருப்பது
கொஞ்ச காலங்களே...
ஆயினும்
எதற்காக
நான்?
இங்கே சாகத்தானே வந்துள்ளேன்?
வாழும் போது வசதிகளைப் பார்த்து
சாவைப் பற்றிய ஞாபகமே இருப்பதில்லை
எனக்கும்
என்ன என்றாலும்
எப்படி என்றாலும் இறுதிகட்ட முடிவு
சாவுதானே எனக்கும்
ஆகவே இன்று நான் ஏதோவொரு விபத்தினாலோ
எதாவது வியாதியினாலோ
இன்னும்
மழை வெள்ளத்தினாலோ
சீறும் தீயினாலோ
குண்டு வெடிப்பினாலோ
கொலையினாலோ
இன்று நான் செத்தாலும் சாவு ஒன்றும்
என்னைச் சாவடிப்பதில்லை
ஏனெனின்
இயேசு எனக்கு
ஜீவன்
சாவு எனக்கு ஆதாயம்
*****
30.8.2026
(நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பில் மரணித்த ஆத்மாக்களுக்காக....)
*****
நாளை முதல் உனக்கு
பள்ளிக்கூடம்
திறக்கப்பட இருக்கிறது
நீ இல்லாத பொழுதுகளில்
உன் பொம்மைகள் எல்லாம்
உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும் என்றேன்
நினைக்காது
அது பொம்மை
அதுக்குள்ள
பஞ்சு தான் இருக்கிறது என்று
எளிய உண்மைகளைச் சொல்லி
அந்த உரையாடலை மகள்
விரைந்து முடித்தபோது
எனது புதிய கனவு ஒன்று
பெரிதாய்
விரியத் தொடங்கியிருந்தது
-அருப்புக்கோட்டை ஆதன் ஆரா
*****
இனிக்க இனிக்கப் பேசி விற்கும்
பலாச்சுளைக்கார அம்மா
இளநீர் பதமாய்ப் பேசி சீவும்
இளநீர்க்கார தாத்தா
கவுச்சி கூட மறந்து போக
மணக்க மணக்கப் பேசி விற்கும்
கருவாட்டுக்காரப் பாட்டி
கருவாயா என உரிமையோடு அழைக்கும்
கம்மங்கூழ் அக்கா
குளுகுளுவெனப் பேசி விற்பாள்
நாளைய நவீனமயமாதலில்
எங்கு போய் வாங்குவது
இவர்களின் வெள்ளந்தி அன்பை
-சபரி
*****
Comments
Post a Comment