இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

  இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி 

     பிரதாபசந்திர விலாசம் தமிழ் நாடக வரலாற்றில் நாடகத்தின் போக்கை மாற்றிய நாடக இலக்கிய வரிசையில் நிற்கத்தக்க படைப்பு. இந்நாடகத்தை திண்டிவனத்தைச் சேர்ந்த ப. வ. இராமசாமி ராஜு எழுதியுள்ளார். இந்திரா பார்த்தசாரதி திண்ணை இதழில் 2006ல் எழுதிய “தமிழின் முதல் இசை நாடகம்” என்ற கட்டுரை பிரதாப சந்திர விலாசம் பற்றிய கவனத்தைத் தமிழ் பரப்பில் கொடுத்தது. அதன்மூலம் 2007ல் இந்நாடகம் ஏனி இந்தியன் பதிப்பகம் மூலம் மறு பதிப்பும் ஆனது. அக்கட்டுரையிலிருந்தே நாமும் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம்.

   1871ல் பிரதாபசந்திர விலாசம் எழுதப்பட்டதாக இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார். மேலும் இந்நாடகம் மேடை ஏற்றப்பட்டதா? என்கிற ஐயத்தை முன்வைத்து க.நா.சு தன்னிடம் தனிப்பேச்சில் பகிர்ந்த செய்தியையும் குறிப்பிட்டிருக்கிறார். பம்மல் சம்பந்த முதலியாரின் “நாடக மேடை நினைவுகள்” நூல் இராமசாமி ராஜு மற்றும் பிரதாபசந்திர விலாசம் அரங்கேறிய செய்தியை அறியத் தருகிறது. “காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரும் நானுமாக காலஞ்சென்ற ராமசாமி ராஜு என்பவரைப் பார்க்கப் போனோம். இவர் சீமைக்குப் போய் பாரிஸ்டர் பரீட்சையில் தேறி வந்தவர். சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் வல்லவர். தமிழில் இதற்குச்சில வருஷங்களுக்கு முன்னமே “பிரதாப சந்திர விலாசம்” என்னும் நாடகத்தை எழுதி அச்சிட்டவர். ஆகவே ‘எங்கள் சபையை இவர் ஆதரிக்கத் தக்கவர் என்றெண்ணி; இவரிடம் சென்றோம். இவரது பங்களாவின் கதவு சாத்தப்பட்டிருந்ததால், அரைமணி சாவகாசம் வெளியில் உட்கார்ந்திருந்தோம். காலை எட்டு மணிக்குமேல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். உடனே நாங்கள் வணங்கி, எங்களை இன்னாரென்றும் இன்ன காரியத்திற்காக வந்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துக்கொண்டோம். அதன்பேரில் கோர்ட்டில் சாட்சியை கிராஸ் (Cross) கேள்விகள் கேட்பது போல் எங்களைக் கேட்கத் தொடங்கினார். அவற்றிற் கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டே வந்தேன். என்ன நாடகங்கள் போடப் போகிறீர்கள் என்று கேட்க, நான் எனது இரண்டு நாடகங்களின் பெயரையும் சொன்னேன். யார் அவைகளை எழுதியது? என்று அவர் கேட்க, நான்தான் எழுதினேன் என்று பதில் உரைத்தேன். உடனே கண்கள் மலர, என்னை விழித்துப் பார்த்தார்! அப்பொழுது எனக்கு வயது 19; உருவத்தில் அவ்வளவு வயதுடையவனாகக்கூட நான் தோற்றவில்லை என்று என் அக்காலத்து நண்பர்கள் பல தடவைகளிற் கூறியதுண்டு. ஆகவே இந்தச் சின்னப் பையனாவது நாடகமெழுதுவதாவது என்று ஆச்சரியப்பட்டார் போலும். பிறகு சுந்தரியென்னும் நாடகத்தின் கதையைக் கேட்க, சுருக்கிச் சொன்னேன். அதனுடன் விடாமல், இந்த நாடகத்தில் பாட்டுகள் உண்டோவென்று கேட்டார். உண்டுடென்று சொல்ல தாயுமான முதலியார் கட்டியிருக்கிறார் என்று கூற, அதில் ஏதாவதொன்றைப் பாடு என்று கேட்டார்! உடனே, என் யௌவனக் கொழுப்பி னாலும், சபையின் காரியத்தை எப்படியாவது ஈடேற்ற வேண்டுமென்னும் ஊக்கத்தினாலும் சுந்தரி நாடகத்தில் சத்தியவந்தன் பாட வேண்டிய பாட்டுகளிலொன்றை, பக்க வாத்தியம் ஒன்றுமின்றிப் பாடினேன்! இவன் என்ன விடாக் கண்டனாயிருக்கிறான் என்ற எண்ணத்தினாலோ, அல்லது தனது கிராஸ் பரிட்சைக்கெல்லாம் சரியாகப் பதில் உரைத்தேன் என்கிற உவகையினாலோ, பிறகு தானும் சபையை ஆதரிப்பவர்களில் ஒருவராக இருக்க ஒப்புக் கொண்டார்.” (அத்தியாயம் 6).

     “அச்சமயம் “பிரதாப சந்திர விலாசம்” என்னும் நாடகத்தை, எழும்பூரில் பெகன்ஸ் பீல்ட் (Beaconsfield) என்னும் நாடார் பங்களாவில் நடத்தினார்கள். எனக்கு டிக்கட் கொண்டுவந்து கொடுத்த நண்பராகிய தியாகராஜன் முதலியாரும் நானும் அன்றிரவு ஒத்திகையைப் பார்த்தோம். அதைப் பார்த்த பொழுது, அதில் அ. கிருஷ்ணசாமி ஐயர், “பிரதாப சந்திரனாக” நடித்தார்.” (அத்தியாயம் 7). இதன் வழி பிரதாப சந்திர விலாசம் மேடையேறியது உறுதியாகிறது.

      அடுத்ததாக, அவ்வை டி. கே. சண்முகம் தனது “நாடகக்கலை” நூலில் “டம்பாச்சாரி நாடகம் எழுதப்பட்ட பிறகு 1877ல் பிரதாப சந்திர விலாசம் என்னும் ஒரு நாடகம் எழுதப் பெற்றது. இந்த நாடகத்தை எழுதியவர் திரு. ராமசாமி ராஜா என்பவர். இதுவும் டம்பாச்சாரி நாடக அமைப்பைப் பின்பற்றியே எழுதப்பட்டது. இந்த பிரதாப சந்திரன் நாடகத்தை நாங்கள் எங்கள் குழுவில் 1926-ல் பல முறை நடித்திருக்கிறோம். நானே பிரதாப சந்திரனாகவும், சில நாடகங்களில் விசுவாச காதகன் என்ற தீயோனாகவும் நடித்திருக்கிறேன்.” (ப.32) என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் வழியே 1877ல் பிரதாப சந்திர விலாசம் எழுதப்பட்டதையும் பலமுறை மேடை ஏறியதையும் அறிய முடிகிறது. இச்செய்திகள் இந்திரா பார்த்தசாரதியின் கட்டுரையில் இடம்பெற்ற இரண்டு கருத்துகளை மீள் பார்வை செய்யக் கூடியதாக அமைகிறது.

     பிரதாப சந்திர விலாசம் நூலைப் பார்த்தவுடன் இரண்டு நூல்கள் நினைவிற்கு வந்தன. முதலாவது, கி.பி ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய “மத்தவிலாச பிரகசனம்” என்ற அங்கத நாடகம். இரண்டாவது திருவேங்கடநாதர் எழுதிய “பிரபோத சந்திரோதயம்” என்ற காப்பியம். இவ்விரண்டு நூல்களும் நினைவிற்கு வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. விலாசம் என்கிற நாடக வகை வடமொழியைச் சார்ந்தது. தமிழ்நாட்டின் தஞ்சைப் பகுதியை மராத்தியர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்திர விலாசம் முதலான நாடகங்கள் இங்கு அறிமுகம் ஆகின. பார்சி நாடக மரபைப் பின்பற்றி இவ்விலாசங்கள் நிகழ்த்தப்பட்ட செய்தியை இந்திரா பார்த்தசாரதி மூலம் அறிய முடிகிறது. மகேந்திரவர்ம பல்லவனின் மத்தவிலாச என்கிற சொல்லைக் கடந்து சிற்றிலக்கிய காலத்தில் விலாசம் என்ற ஒரு இலக்கிய வகையும் இங்கு எழுதப்பட்டு இருக்கிறது. அதற்கு சான்றாக லட்சுமி விலாசம், கற்பனை விலாசம், திருமுக விலாசம், சமூக விலாசம் போன்றவற்றைக் கருதலாம். இதில் “அண்டகோள விலாசம்” என்ற நூல் பழமையான விலாச நூலாகச் சொல்லப்படுகிறது. வடமொழியில் நாடகத்தை மட்டும் குறிக்கக்கூடிய விலாசம் என்கிற சொல் தமிழில் சிற்றிலக்கிய வகையையும் குறிப்பிடக்கூடியதாக அமையப்பெற்று இருப்பதை இதன் வழியே காண முடிகிறது.

        விலாசம் என்கிற சொல்லுக்கு அழகு, ஆடவர் மகளிர் விளையாட்டு, நாணக் குறிப்பு, பத்திரிகையின் புற எழுத்து, பொழுதுபோக்கு, விளையாட்டு, வினோதம், வேடிக்கை, கூச்சம், நாடக நூல், சுகானுபவத்திற்குரிய இடம், முகவரி, வியாபாரக்குறி, வாழை, தீபம் என்று பல்வேறு வகை பொருளினை அகராதிகள் கூறுகின்றன. இதில் பிரதாப சந்திர விலாசத்திற்கு பொருந்தும் பொருளாக சதுரகராதி கூறும் ஆடவர் மகளிர் விளையாட்டு என்ற பொருளும் சென்னைப் பல்கலைக்கழக அகராதி குறிப்பிடும் காமக் குறிப்போடு கூடிய செய்கை மற்றும் கூட்டு வியாபாரக் கடை, பண்டங்களில் குறிப்பிடப்படும் விலைக் குறியீடு முதலான சொற்களும் நாடகத்தின் உள்ளடக்கம் சார்ந்து பொருந்தும் வகையில் அமைகின்றன.

   மராத்தியர்கள் மற்றும் பார்ஸியர்களின் நாடகமரபைப் பின்பற்றி எழுந்த விலாச வகை நாடகங்கள் கற்றவர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்த செய்தியை பம்மல் சம்பந்த முதலியார் மூலம் அறிய முடிகிறது. தமிழ்நாட்டில் கூத்து நாடக மரபிற்குப் பின் அதிகளவில் பேசப்படக்கூடிய இடத்தை விலாச நாடகங்கள் அடைந்திருக்கின்றன. அப்போது கூத்தில் பயன்படுத்தக்கூடிய கதையம்சங்களை விலாசங்களாக எழுத முற்பட்டுள்ளனர். பிரதாப சந்திர விலாசத்திலும் கூட கட்டியக்காரனின் வருகை மற்றும் காப்புப் பகுதி இடம்பெற்றிருப்பதை இதன் வழி கவனிக்கலாம். இராமச்சந்திர கவிராயரின் விலாச நாடகங்கள் கூத்து விலாச நாடகங்களாக ஆக்கப்பட்டதற்குரிய உதாரணமாகும். கூத்துடன் கர்நாடக இசை இணைந்து விலாச நாடகங்களாக நடத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புராணக் கதைகளைக் கடந்து எழுதப்பட்ட விலாச நாடகமாக 1857ஆம் ஆண்டு காசி விசுவநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி விலாசம் என்கிற நாடகத்தைக் கருதலாம். இந்நாடகம் முழுக்க முழுக்க கூத்து மரபை ஒட்டிய இசை நாடகமாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் உள்ளடக்கத்தில் சமூக கருத்தியல் வெளிப்பட்டுள்ளது. இதற்குப் பின் இசையுடன் வசனத்தைக் கலந்த நாடகமாக 1877ல் ப. வ. இராமசாமி ராஜு எழுதிய பிரதாப சந்திர விலாசம் இருக்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படியான தமிழின் முதல் இசை நாடகம் என்பதற்கு பதிலாக இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் என்று பிரதாப சந்திர விலாசத்தைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். 1915 பதிப்பில்  ஜனசமூக நாடகம் என்பதாகவே பிரதாப சந்திர விலாசம் குறிப்பிடப்பட்டுள்ளது.  

      டம்பாச்சாரி விலாசம் எப்படி புராணக் கதைகளில் இருந்து விலகி சமூகத்தை மையப்படுத்திய செய்திகளையும் சமூக நிகழ்வுகளையும் நாடகக் களமாகக் கொண்டு நாடக வகையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதோ அதன் தொடர்ச்சியாக பிரதாப சந்திர விலாசம் நாடக எழுதியல் முறையிலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். இசைப் பாடல்களுடன் வசனம் கலந்த இந்நாடகத்தை குறித்த பதிப்புரையில் கோ. ராஜாராம் “இந்த நாடகத்தில் மணிபிரவாள நடை இல்லை என்பதும் ஆய்வுக்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார். நாடகத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய கதாபாத்திரங்களின் பெயர்களை உள்ளடக்கிப் பார்த்தால் இந்நாடகத்தில் மணிபிரவாள நடைக்கு உட்பட்டது எனலாம். ஆங்கிலம் , தெலுங்கு போன்ற மொழிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நாடகத்தின் தனித்தன்மையில் வசனக் கலப்பு மட்டுமன்றி பாடல்களுக்குள் தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தை இயல்பாக கலந்து வெளிப்படுத்தியதும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. நாடகத்தில் வரக்கூடிய திருவேங்கடத்தான் கதாபாத்திரம் முழுக்க தெலுங்கிலேயே பேசுவதோடு இயல்பாக ஆங்கிலச் சொற்கள் நாடகத்தினுள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்தகைய செய்திகள் நாடகம் எழுதப்பட்ட காலத்தில் இருந்த மொழிப் புழக்கத்தைக் கூறும் வகையில் அமைகின்றன.

        காட்சி, அங்கம் என்ற பகுப்புடன் இந்நாடகம் எழுதப்பட்டிருப்பதோடு மடக்கு, துறை ஆகிய இலக்கிய அணிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 160க்கும் மேலான விருத்தப்பா பாடல்களும் அகவல், கலித்துறை மற்றும் கொச்சக கலி பாடல்களும் கண்ணிகளும் நாடகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.. சில பாடல்களில் காம்போதி, தாளம், சங்கராபரணம் என ராகக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது. கதாபாத்திரங்களின் பெயர்களை இந்நாடகத்தில் தனித்துக் காண வேண்டியுள்ளது. 12ம் நூற்றாண்டில் வங்கதேசத்தைச் சார்ந்த கிருஷ்ணமிச்ரன் வடமொழியில் எழுதிய நாடக நூல் ஒன்றைத் தழுவி திருவேங்கடநாதர் மூலம் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “பிரபோத சந்திரோதயம்” காப்பியத்தில் காணப்படும் கதாபாத்திரங்களின் பெயர்கள் இந்நாடகத்தில் இடம்பெற்ற பெயர்களுடன் ஒத்திருக்கிறது. காமன், மோகன், அகங்காரன், மதன், தீவினை, கபடி, கீர்த்தி, அநீதி, கோபம், சந்தேகன், கருணை, இயமன், நியமன், பிராணயாமன், பிரத்தியாகாரன் போன்ற பெயர்கள் பிரபோத சந்திரோதயம் காப்பியத்தில் உள்ளன.. இப்பெயர்களுக்கும் பிரபோத சந்திரோதயத்தின் கதைக்கும் தொடர்புண்டு. அதேபோல பிரதாப சந்திர விலாசத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய கதாபாத்திரங்களின் பெயர்களும் குசும்பா மாஸ்டர் (குசும்பு) சுண்டேமாஸ்டர் (அவன் ஞாயிற்றுக்கிழமைதோறுந்தான் நண்பர்கள் கண்ணுக்குப் படுவான், மற்றைய நாட்களில், கடன்கொடுத்தவர்களுக்கு பயந்து தலைமறைவாக இருப்பான்), பத்தாயி மாஸ்டர் (சாராயம்), வெட்டுணி (துஷ்டன்), இடிமுழுங்கி (முழு அயோக்கியன்), வித்யாசாகரர், நிபுணகோசர், குணாலயர், சுதேசமித்ரர், சமயோசிதர், லெளகீகர் (நடைமுறைவாதி), புராதனர் என்ற பெயர்கள் கதாபாத்திரங்களின் குணங்களோடு தொடர்புடையானவாக இருக்கின்றன. இதில் சண்டே மாஸ்டர் பற்றிய விளக்கம் மாரி திரைப்படத்தில் வரும் சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தின் பெயர் விளக்கத்தை ஒத்தது. இந்நாடகத்திலும் அதேபோன்ற பெயர் சூட்டுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

     இந்நாடகத்தின் கதை மாயோ என்ற ஆங்கில கவர்னரின் ஆட்சிக்காலத்தில் ஜமீன்தாரராக இருந்த லக்ஷ்மி விலாசரின் மகன் பிரதாபச்சந்திரன் தன்னுடைய தந்தை ஊரில் இல்லாத காலத்தில் எப்படியான செயல்களில் ஈடுபட்டான் என்பதும் அதனால் விளைந்த தீமைகளும் உரையாடல்களும் காட்சிகளுமாக விரிகின்றன. தந்தை ஊருக்கு வந்த பின் அவன் மனம் மாறுவதாக கதை முடிகிறது. இதில் பிரதாபசந்திரன் ஒழுக்க நெறியிலிருந்து விலகி பரத்தைமைகளை நாடிச் சென்று தன் வாழ்க்கையினுடைய சீர்மையை இழந்து மனம் திருந்திய பகுதி தான் நாடகத்தில் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி நாடகம் எழுதப்பட்ட காலத்தில் மொழிப் பழக்கம் மட்டுமல்லாமல் அக்காலத்திய நடவடிக்கைகளும் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் நாடகத்திற்குள் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளதால் வரலாற்றுப் பார்வையிலும் அணுக முடிகிறது.

     திருவேங்கடத்தான் வைணவப் பெண் தரகர். பாவாடை சித்தர் சைவம் சார்ந்த பெண் தரகர். சமயப் பணி செய்வோர் பெண் தரகு வேலையை ஒரு பகுதியாகச் செய்ததோடு மதத்தின் வழி கிடைக்கும் மதிப்பை அவற்றுக்கு பயன்படுத்தியுள்ளதும் இந்நாடகம் சுட்டிக்காட்டும் முக்கியமான நிகழ்வு ஆகும். ஒருபுறம் மதம் சார்ந்த விவாதங்களும் மறுபுறம் பெண் சார்ந்த விவாதங்களுமென வாழ்கின்றனர். சமய விவாதங்களின் மூலம் வெளிப்படும் புலமையை வைத்து செல்வந்தர்களுடன் நட்பு பாராட்டி பெண் மாயைக்குள் அவர்களைச் சிக்கவைக்கின்றனர். திட்டமிட்டு செல்வங்களைச் சுருட்டி மது, மாது என அவர்களது பணத்தில் பிழைப்பு நடத்தியதை நாடகம் பேசுவதோடு சமயப் போர்வைக்குள் தங்களைப் போர்த்திக்கொண்டு செயல்படுவது பற்றிய விவரணைகளும் இந்நாடகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

     நிபுணகோசர் பிரதாப சந்திரனிடம் சொல்லும் வேலைவாய்ப்பைப் பெறுதல் பற்றிய பாடல் ஒன்று இன்றைய காலத்திற்கும் பொருத்தமாக அமைந்துள்ளது.

“அயர்வின்றி நீங்கள் எல்லாம் அதிகமாய்ப் படிக்கும்போது அக்

கயவர்கள் துரைமார் வீட்டில் கவனமாயும் ஏது செய்து 

நயவஞ்சகங்கள் பேசி நண்பர்போல் நடித்துக் காட்டித் 

தயவையும் பூர்த்தியாகச் சம்பாதித்து இடுவதாலே”  

 இப்பாடல் மூலமாக எவ்வாறு உயர் பொறுப்பிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களை மகிழ்வித்து அவர்கள் சொல்வதை எல்லாம் செய்து வேலையைப் பெறுகின்றனர் என்பதையும் நேர்மையின் வழியில் வேலை வாங்க வேண்டும் என்ற கனவிலிருப்பவர்கள் கடைசி வரை செய்யும் முயற்சிகள் வீண் முயற்சிகளாகவே போவதும் பேசு பொருளாகியுள்ளது. இது இக்காலத்திலும் பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பொருந்தக்கூடிய செயலாகவே இருந்து வருகிறது. 

     இதைத் தவிர்த்து அகத்தியர் தான் தமிழை ஓதினார் என்கிற செய்தி அடங்கிய பாடலும் இந்நாடகத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்த வருடம் அகத்தியரைப் பற்றிய பல்வேறு கருத்தரங்கங்கள் நடத்தப்படுவதோடு அதில் மீண்டும் மீண்டுமாக அகத்தியர் தமிழை ஓதினார் என்ற கருத்து சொல்லப்படுகிறது.

“அகத்திய ரிடமு 'தித்தே யாலவாய்ச் சங்கத் தோங்கி 

மகத்துவ நாய னார்தம் வாக்கினிற் பொலிந்த பேதை 

மிகுத்துள் வன்பே யன்றி மெய்த்திற மேது மில்லா 

வகத்தன்யா னியற்று மிந்நூ லலங்கலைப் புனைவ ளென்னோ.


விதியுணர் புலவீ ரிந்த வியன்றமிழ் மாதை யென்பா 

லுதியென நானழைத்த லுளமகிழ்ந் தன்னை மாட்டே 

மதியிலாக் குழவி நின்று மதியினை யழைத்தல் போலாம் 

குதலையைப் பிழைபொறுத்துக் கொள்ளுவீர் புன்சிரித்தே.” அதே போக்கில் இந்த நாடகத்திலும் அகத்தியரிடம் இருந்து தமிழ் உதித்ததாகச் சொல்லப்பட்டுள்ளது‌. மேலும் நாடகத்தில் இடம்பெறும் சாக்கடை முத்துப் புலவர் எனப்படும் சோணாசல கவிராஜப் பண்டிதருடைய நடவடிக்கைகள் தமிழ் புலவர்களின் மனப்போக்கு மற்றும் அக்காலத்திய உடனுக்குடனே கவி இயற்றும் திறனுடைய புலவர்களின் திறம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விஞ்ஞான ரீதியான சிந்தனை புலவர்களுக்கு இருக்காது என்கிற வாதமும் சாக்கடை முத்துப் புலவரை வைத்து தமிழ் புலவர்கள் மீது வைக்கப்படுகிறது.

    தமிழ் புலவர் மீது விமர்சனம் வைக்கும் நாடகம் சுதேசமித்திரர் மூலம் ஆங்கில ஆட்சியாளரால் விளைந்த நன்மைகளைப் பேச வரும் இடத்தில் ஆங்கிலத்தைப் படிப்பதால் கிடைக்கக்கூடிய புதிய கல்வித்துறைகளைப் பாடலின் வழி பட்டியலிட்டுக் காட்டுகிறது. அப்பட்டியலில். Metaphysics, Ethics, Mathamatics, Logic, Medical Sciences, Economics, World History, Chronology, Geography, Navigation, Natural Sciences, Telegraphy போன்ற துறைகள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படியான கருத்துக்கள் பதிவாகும் இடம் ஒருபுறமும் மறுபுறம் அதே ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதோடு மது, மாது போன்ற அவர்களுடைய செயல்பாடுகளை பின்பற்றுவதன் மீதான விமர்சனமும் இடம்பெற்றிருக்கிறது. மேற்கத்திய வழக்கம் என்று சொல்வதன் ஊடாக இவ்விரு மாறுபட்ட நிலைகள் இருக்கின்றன. எதை எடுத்துக் கொள்வது எதை விடுவது என்கிற தேர்வு ஒவ்வொருவர் கண் முன் நிற்பதும் இதன் வழி உணர்த்தப்படுகிறது. ஆங்கிலேயர்கள் அல்லது மேற்கத்திய அறிஞர்களிடமிருந்து பல்துறை சார் ஆராய்ச்சி அறிவைப் பெற வேண்டுமே தவிர உள்ளதைக் கெடுக்கக்கூடிய பழக்க வழக்கங்களுக்கு ஆட்படக்கூடாது என்கிற கருத்து நாடகம் வாயிலாக வெளிப்படுகிறது. அதேபோல ஆங்கிலேய எதிர்ப்புப் பதிவுகளும் எதிர்க்கும் புராதனன் போன்ற எதிர்ப்பவர்களின் மரபார்ந்த மனநிலையும் நாடகத்தில் வெளிப்படுகிறது.

     சமீபத்தில் மாஸ்டர் சுந்தரம் என்ற திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். திரைப்படத்தில் பழங்குடி கிராமம் ஒன்றில் ஆங்கிலத்தில் அங்குள்ள மக்கள் பேசினர். அத்தகைய காட்சிகள் ஒவ்வொன்றும் இயல்பாக அமைந்திருந்தன. இதுதான் நாடகத்தை வாசிக்கும் போதும் கண் முன் வந்தது. மிக இயல்பாக ஆண்களும் பெண்களும் ஆங்கிலத்தைப் பேசும் வகையில் படைக்கப்பட்டிருக்கின்றனர். விசுவாசகாதகனின் மனைவி எஸ், நோ என ஆங்கிலத்தில் பேசுவதோடு அவனைச் சாடுவதற்கும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறாள். ஆங்கிலப் பயன்பாடு பாடலின் வழியாகச் சொல்லப்பட்டிருக்கும் முறைமை 1877ல் நாடக இலக்கியத்திற்குள் இருப்பதற்குரிய பதிவாக இந்நாடகத்தைச் சுட்டிக் காட்ட முடியும்‌. தரகர்கள் தங்களிடம் வேலை செய்யும் பெண்களை தேவடியாக்கள் என சொல்லி பேசிய பகுதியும் அவர்களைத் தங்களுக்குரிய மோட்ச நிலைகளாகக் கண்டு பேசுவதுமான இருவேறு நிலைகள் நாடகத்தில் அமைந்துள்ளது. ஒரு தரகன் மற்றொரு தரகனின் தாசியைக் கைப்பற்ற முனைந்தாலும் சில நேரங்களில் தங்களுக்குள் திட்டமிட்டு ஒற்றுமையாக ஒரு செல்வந்தனை பெண் மோகவலையிலும் மதுவிலும் விழவைத்து சொத்துகளை அபகரித்து பங்கு போட திட்டமிடுகின்றனர். தங்களுக்குரிய பங்கு கிடைக்காத பட்சத்தில் செல்வந்தன் ஆட்பட்டிருக்கும் தாசியையும் தரகனையும் குறித்து ஒற்றுமையாக குறை கூறி தன் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். இவற்றை செய்வதற்குரிய ஆயுதமாக சமயத்தை பயன்படுத்தி இருப்பதற்கு பாவாடை சித்தர் மற்றும் திருவேங்கடத்தான் ஆகியோர் உதாரணங்களாகின்றனர். இதில் சைவ சமய பாவாடை சித்தர் தமிழராகவும் வைணவ சமய திருவேங்கடத்தான் தெலுங்கராகவும் அடையாளமிடப்பட்டு இருப்பதையும் நாம் நுண்மையாக உணர்ந்து அதற்குள் உள்ள பின்புல அரசியலையும் நாம் ஆராய்வதற்குரிய வெளி இருக்கிறது.

     பாவாடை சித்தர் “படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்” என்ற கூற்றுக்குரிய எடுத்துக்காட்டாக இருக்கிறார். கல்விக்குப் பதிலாக வேதாந்த நம்பிக்கைகளில் திளைக்கச் சொல்லும் பிற்போக்கு சாமியாராக பாவாடை சித்தர் நாடகத்தில் இடம்பெற்றிருக்கிறார். இதனை “படிப்பிற் பிரயோஜனம் இல்லை வேதாந்தத்தில் சொல்லியிருப்பதைக் கேள்” என்ற அவருடைய பேச்சில் இருந்து இனம் காணலாம். பிரதாபசந்திரன் சிக்கிக்கொண்ட சமயத்தில் சுதேசமித்ரர், நிபுணகோசர், குணாலயர் போன்றவர்கள் தங்களுக்குள் வருத்தத்தையும் பெண் தரகர்களால் நாடு நாசமாகப்போவதாக கோபத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். நிபுணர் விசுவாசகாதகனை சவுக்கால் அடிக்கும் இடமும் நாடகத்தில் இடம்பெற்றுள்ளது.

 நிபுணகோசாரிடம் பாவாடை சித்தர் மற்றும் திருவேங்கடத்தான் ஆகியோருடைய உரையாடல் இதில் அடக்கம்‌. பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் தாசித் தொழிலில் ஈடுபட வந்ததற்கான அவல நிலையும் தனக்கு உண்மையாக இருக்கும் பெண்ணை செல்வந்தனிடம் ஆசைகாட்டி அவனோடு இருக்கச் சொல்லி பணம் பறித்து தன்னிடம் தருமாறு ஒவ்வொரு தலைவர்களும் பெண்களைப் பணிக்கும் வேலையையும் செய்கின்றனர். பிரதாபசந்திரன் தனக்கு தரகு வேலை பார்த்த விசுவாசகாதகனிடம் பணத்தை நகட்டாமல் அவன் பழக்குவித்த பெண்ணுக்காக விலை உயர்ந்த அணிகலன்களை எல்லாம் வாங்கித் தருகிறான். ஒரு கட்டத்தில் குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், ஆபரணங்களென அனைத்தையும் தாசிக்காக தருவதற்கு தயார் என சொல்லுமளவு பரிதாப சந்திரனாக பிரதாப சந்திரன் மாறிய பகுதி அமைகிறது. விசுவாசகாதகன் செய்த ஏமாற்று வேலை பிற தலைவர்கள் மூலம் பிரதாப சந்திரனுக்குச் சொல்லப்படும் இடத்தில் அவனுடைய தவறு அவனுக்குள் உணரப்படுகிறது. குணாலயர் பால்ய விதவைகள் குறித்து பேசும் பகுதியும் நாடகத்தின் ஓரிடத்தில் வருகிறது.

    விசுவாசகாதகன், இடிமுழுங்கி, சண்டை மாஸ்டர், பந்தாயி மாஸ்டர் போன்றவர்கள் தன்னுடைய தகப்பனின் சொத்தைப் பெண்களிடம் இழந்ததை பெருமையாகப் பேசுவதோடு அதுவே வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கான வழி என்று நியாயம் சேர்க்கின்றனர். விசுவாசகாதகன் மனைவியின் மூலம் பாடப்படும் பாடலும் அவளது எதிர்ப்புணர்வும் மனைவி என்பதால் அவளை நயமாக சமாதானம் செய்ய விசுவாசகாதகன் முயல்வதுமான உரையாடல் பகுதி பெண்களின் வாழ்நிலைப் பதிவாக அமைகிறது. நடைமுறை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து பல்வேறு குற்றங்களையும் பாதிப்பையும் அடுக்கிச் செல்லும் வகையில் விசுவாசகாதகனின் மனைவி அவனிடம் சண்டையிடும் பகுதிகள் பாடல்களாக இயல்பான வாசிப்புக்கேற்ப எழுதப்பட்டிருக்கிறது. 

   சாக்கடை முத்துப் புலவர் மனித மன விகாரத்தை குறிப்பிடும் இடம் இந்நாடகத்தில் குறிப்பிடத்தக்க பகுதியாகும். “மனிதருக்கும் மூன்று விகாரங்கள் உண்டு. ஒரு பெண்ணெதிர்ப்பட்டால் தோன்றல், அவள்மேல் மோகம் கொண்டால் திரிதல், அவள் வலையில் அகப்பட்டால் கெடுதல்.” என்கிறார் சாக்கடை முத்துப் புலவர் இப்படியாக பல்வேறு தத்துவம் உள்ளடங்கிய விளக்கங்கள் உள்ளடங்கிய உவமை மற்றும் வர்ணனைப் பாடல்களை நாடகத்தில இருக்கின்றன.. இவற்றைத்தாண்டி ஊர் திரும்பி வந்த லக்ஷ்மிகோசர் மூலம் மைசூர், வங்காளம், டில்லி போன்ற ஊர்களின் சிறப்புகள் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் மகன் பிரதாப சந்திரனைக் கண்டித்து தன்னுடன் நாட்டின் வளர்ச்சிக்குரிய வேலைகளைச் செய்ய பணிக்கிறார். தந்தை, மகன் ஆகியோருக்கு இடையிலான அரசியல் பூசல்களும் கொலைகளும் காலந்தோறும் வரலாற்றில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நாடகத்தில் லஷ்மிகோசருக்கு பிரதாப சந்திரன் கீழ்ப்படிந்து நடக்கிறான். அக்காலத்திய பயன்பாட்டில் இருந்த மொழியுடன் ஆயுதங்களைக் குறித்த பதிவும் இந்நாடகத்துள் உண்டு. ஈட்டி, கத்தி, பிச்சுவா, தடி, வில், துப்பாக்கி போன்றவற்றைப் பற்றிய பெயர்களும் குறிப்புகளும் நாடகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

  ஒட்டுமொத்தமாக இந்த நாடகத்தின் மையக்கரு விலைமகளிரிடம் சிக்கி செல்வத்தை இழக்கும் செல்வந்தனைப் பற்றியதென்றாலும் கூட நாடகத்தில் இடம்பெறும் உரையாடல்களின் வழி கதாப்பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்கின்றன. இதனை வெறும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான நாடகத்திற்குரிய உரசல் என்று மட்டும் கடந்து போக முடியாது. அதனுள் ஆசிரியரின் கருத்து வெளிப்பாட்டின் முடிவெடுக்க முடியாத குழப்பமும் தென்படுவதாகப் படுகிறது. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் படமெடுக்க ஆசிரியர் முயன்றுள்ளதாகவோ அல்லது தனக்குத் தெரிந்த அப்போது நடந்த நிகழ்வுகளின் தகவல்களை எல்லாம் பதிவு செய்ய வேண்டுமென அதற்காக சில பக்கங்களை நீட்டியிருப்பதாகவோ இதனை எடுத்துக்கொள்ளலாம்.


துணை நின்றவை: 

தமிழின் முதல் இசை நாடகம்

https://old.thinnai.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d_%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d_%e0%ae%87%e0%ae%9a%e0%af%88_%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

https://old.thinnai.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0_%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d_2/

பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்) -வெளி. ரங்கராஜன் 

  https://old.thinnai.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa_%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0_%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%ae/

நாடகமேடை நினைவுகள்  https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU8juMy&tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/

நாடகக்கலை 

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0001803_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf

பிரதாப சந்திர விலாசம் https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0001803

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு