கிருத்திகா கவிதைகள்
கிருத்திகா கவிதைகள்
அவள் கொஞ்சம் பயந்த சுபாவம்
காலிடுக்கில் கௌரவம் புதைத்து
ஒரு துளி உதிரத்தில் கற்பைப் புதைத்த
இச்சமூகத்தைக் கண்டு
அவள் கொஞ்சம் பயந்த சுபாவம்
*****
அவளுக்கு ஒன்றும் தெரியாது
பெற்றுவிட்டால் வளர்த்துவிட்டால்
அவளுக்கு ஒன்றுமே தெரியாது
பிள்ளையின் சிரிப்பைத் தவிர்த்து
அவளுக்கு ஒன்றும் தெரியாது
பாவம் அவளே ஒரு பேதை
அவளுக்கென்ன தான் தெரியும்
*****
பத்தாண்டுகளோ
பதினான்கு ஆண்டுகளோ சிறைவாசம்
என் மார்பை கசக்கி
ஆண் குறி துளைத்து
உதிரம் பீறிட்டு
நகங்கள் கீறிய
இப்பிண்டதுக்கு வாழ்நாளே
சிறை வாசமோ?
*****
திரும்பும் இடமெல்லாம் காவிநிறம்
கேட்கும் ஒலிகளிலோ ஒன்றும் விளங்கவில்லை
புரியாத சொற்களால் நிறைந்த வங்கிப் படிவம்
ஓய்வூதியம் வேண்டி ஒருமணி
நேரப் போராட்டம்
மொழியே தெரியாத
என் தாய் தமிழ்நாட்டில்
***
Comments
Post a Comment