போருக்குப் பிறகு -இர. கண்ணதாசன்
போருக்குப் பிறகு -இர. கண்ணதாசன்
ஒரு குழந்தையின் மகிழ்ச்சியைத்
தொடர்ந்து
நிராகரிக்கும் போது
மறத்துப்
போகதான் செய்கிறது
அழுகையை நிறுத்தத் தெரியாமல்
அப்படி வருகிறது ஒரு அழுகை.
வற்றிய குளத்தில்
வெடிப்புவிட்ட நிலங்கள்
ஒன்றிணைந்து
குண்டு மழை பொழிகிறது
அழுவதற்குநேரமில்லாத போதும் கூட
எஞ்சிய கண்களின் ஈரம்
தடுத்துக்கொண்டு இருக்கிறது.
காத்திருந்தேன் இம்மண்ணில் கொண்டுவந்தவர்கள்
எங்கேயோ சென்று திரும்ப வரவில்லை
அவர்களோடு
அறுந்த கயிறும் மெளனமாகக் காத்திருந்தது.
நேற்றோடு
எல்லாம் முடிந்தன என்றீர்கள்
இன்னும் முந்தா நாளின் பாதிப்பிலிருந்தே
நான் மீளவில்லை.
நாளைக்கானது
உனக்கே சொந்தம்
நாங்களெல்லாம் அனாதைகள் தானே.
ஆறுதல் கூற யாருமில்லை
தாவரத்தின்
மடியில் என்னுடைய
பிறப்பின்
தாலாட்டைப்
பரிசாகக்
கொடுத்துவிட்டேன்.
என்றைக்காவது நாளை இன்றே வந்திருக்கிறதா
அடுத்த கணக்கில் எடுத்துகொள்ள முடியாத நாட்கள்
நிகழ்கணத்தில்
என்னுள் எப்படி வந்து சேர்ந்தன
யாருமே கண்டுகொள்ளவில்லை
காண முடியாத என்னுடைய பிரச்சனை
யாருக்கும்
கிடையாது
யாருக்கோ
உரித்தானவர் கண்ணில்
உதிக்கும்
கருணை
கூட நம்மவர்க்கில்லை
எல்லா பாதைகளும் திறந்தே கிடந்தன
இதயத்தை இழந்த கால்கள் எப்படி நடக்கும்
அகதியெனும் பெருவழியில்
Comments
Post a Comment