உளன்று உலாவும் மனம் -அழகுராஜ் ராமமூர்த்தி

  உளன்று உலாவும் மனம் -அழகுராஜ் ராமமூர்த்தி


    சோசலிச யதார்த்தவாத எழுத்து முறையில் முன்னோடியாக பார்க்கப்படும் ரகுநாதன் பல்வேறு வகைப்பட்ட இலக்கிய மாதிரிகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக செயல்பட்டுள்ளார். ‘’முன்னோடியின் துணிவு’’ என்ற படைப்பு தகவு இதழில் வெளியான கட்டுரையில் அது பற்றிய சில தகவல்களை மேலோட்டமாக குறிப்பிட்டிருக்கிறேன். புதுமைப்பித்தன் வரிசையில் வரும் எழுத்தாளராக அறியப்படுபவர்களில் ரகுநாதனுக்கு முதன்மை இடம் உண்டு.  புதுமைப்பித்தனுடன் நெருங்கி பழகியவரும் கூட. ‘’புதுமைப்பித்தன் வரலாறு’’ அதற்கு சான்று. ரகுநாதனை புதுமைப்பித்தனின் வழி வந்தவராக மட்டுமின்றி  கு.ப.ராஜகோபாலனின் தாக்கம் உடையவராகவும் கருதத் தகுந்த இடத்தை அவரது படைப்புகள் தருகின்றன. ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையிலான உறவு நிலைகளின் பல்வேறு நுணுக்கமான அடுக்குகளை கச்சிதமாக பதிவு செய்தவர் கு.ப.ராஜகோபாலன். அந்தச் சாயலை ரகுநாதனின் இரண்டு நாவல்கள் மற்றும் அதை ஒட்டிய சிறுகதை ஒன்றின் வாயிலாக இக்கட்டுரை முன்வைக்க முயல்கிறது. 


    இங்கு,  கு.ப.ராஜகோபாலனோடு ரகுநாதனை ஒப்பிடுவது நோக்கமல்ல.  ஆனால் கு.ப.ரா.வின் சாயலில் வெளிப்பட்டுள்ள ரகுநாதனின் படைப்புகளில் பேசப்படாத சில பக்கங்களை பேச தொடங்குவதே நோக்கம். 1952ஆம் ஆண்டு மீனாட்சி புத்தக நிலையம் மூலமாக வெளிவந்த ‘’க்ஷணப்பித்தம்’’ என்ற சிறுகதை தொகுப்பில் ஆறாவது சிறுகதையாக ‘’திரிசங்கு சொர்க்கம்’’ என்ற சிறுகதை வெளிவந்துள்ளது. 1980ஆம் ஆண்டில் வெளியான இரண்டாம் பதிப்பின் ஒளிநகல் பிரதியே எனக்கு வாசிக்க கிடைத்தது. அதில் கதையின் பெயர் திரிசங்கு மண்டலம் என்றில்லாது திரிசங்கு சொர்க்கம் என்றும் 1949ல் எழுதப்பட்டதாகவும் குறிப்பு இருக்கிறது. சக்தி காரியாலயம் மூலம் 1950ல் வெளிவந்த ‘’கன்னிகா’’ நாவலின் முன்னுரையில் ‘’இந்தச் சிறுநாவலின் மூலக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு சிறுகதை எழுதினேன். ‘’க்ஷணப்பித்தம்’’ என்ற எனது கதைத் தொகுதியில் உள்ள ’திரிசங்கு மண்டலம்’ என்பதே அந்தக் கதை.  திருப்தி ஏற்படவில்லை. எனவே, அதே கருத்தை அடிமுடி தொட்டு நாவலாக்க எண்ணினேன். அதுவே இந்த ‘கன்னிகா’.’’என்று குறிப்பிடுகிறார். நாவல்  வெளியான வருடம் 1950 மே மாதம் என்பதை காலச்சுவடு 2017 பதிப்பின் மூலம் அறிய முடிகிறது. ஒருவேளை 1950 என்றால் மீனாட்சி புத்தக நிலையத்திற்கு முன் கதைத் தொகுதியை வேறொரு பதிப்பகம் வெளியிட்டு இருக்க வேண்டும். மேலும் இதழில் வெளியான கதையாக ‘’திரிசங்கு சொர்க்கம்’’ குறிப்பிடப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது


     ரகுநாதன் ‘கன்னிகா’ முன்னுரையில் கூறிய செய்தி ‘’திரிசங்கு சொர்க்கம்’’ கதையில் ஒத்துப் போகிறது. ‘’கன்னிகா’’ நாவலின் கடைசி அத்தியாயங்களில் வரும் தகவல்கள் எல்லாம்  ‘’திரிசங்கு சொர்க்கம்’’ சிறுகதையில் சொல்லப்பட்டவனாகவே இருக்கின்றன. செப்டம்பர் 1945ல் வெளியான ரகுநாதனின் முதல் நாவல் புயல். இந்நாவலும் அகவாழ்வைப் பற்றிய சித்திரமாகவே அமைகிறது. புயல், கன்னிகா, திரிசங்கு சொர்க்கம் ஆகிய மூன்று படைப்புகளும் ஒருங்கிணையும் இடமாக காதல் உள்ளிட்ட அகவாழ்வு இருக்கிறது. இந்த ஒன்றிணைவின் வழி ரகுநாதன் அகவய வாழ்வில் புறம் சார்ந்த சமூக விழுமியங்கள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதையும் சமூகப் பார்வை கடந்த தன்னெழுச்சியான பண்பாட்டு பெருமித உணர்வு அகத்தில் நிகழ்த்தும் போராட்டத்தையும் தனது படைப்பின் வழியே வெளிப்படுத்தியுள்ளார். 


   புயல் மற்றும் கன்னிகா ஆகிய இரண்டு நாவல்களிலும் சிறுவயதின் செயல்பாடுகளும் அவற்றின் நினைவும் முக்கியத்துவம் பெறுகின்றன. எனினும் இரண்டு நாவல்களிலும் நிகழ்ந்து முடியும் போராட்டத்தின் விளைவு வேறுபட்டனவாகும். முதலில் ‘’திரிசங்கு சொர்க்கம்’’ கதையில் ரகுநாதனுக்கு நிறைவு ஏற்படுத்தாத அம்சம் என்ன? கன்னிகா நாவலில் எப்படி  அது நிறைவேறி இருக்கிறது என்பதையும் ஒருசேர பார்க்க வேண்டியுள்ளது. திரிசங்கு சொர்க்கம் 37 வயதுடைய தெரிவையிலிருந்து பேரிளம் பெண்ணாக மாறிவரும் கன்னியான நிர்மலாவிடம் தொடங்குகிறது. 37 வயதிலும் கன்னிமை பிரியாத பெண் என்ற அறிமுக செய்திக்குள் ஏகப்பட்ட  கதைகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. சிறுகதை ஒரு வரியில் சொல்லி முடிப்பதை நாவல் ஆங்காங்கே சில கதைகளைக் கொண்டு விரிவாக்கியுள்ளது. அதேசமயம் நாவலில் தனித்து முன்வைக்கப்படாத கதையின்  மையம் குறித்த முக்கியமான வெளிப்பாட்டை சிறுகதை கொண்டிருக்கிறது. நாவல் படிநிலை வாரியாக வளர்ச்சியைப் பேசும்போது சிறுகதை 37வயதில் தொடங்கி அதுவரை அவள் கண்ட சோதனைகள் மற்றும் வந்த வழியில் அடைந்த உணர்வுகளை விளக்காமல் ‘’அவள் வாழ்க்கையில் பல சோதனைகள். அவள் வாழ்க்கையே ஒரு சோதனை தான். அந்தச் சோதனையினால் அவள் உள்ளம் வைரம் பாய்ந்தது.’’ என்று குறிப்பில் சொல்லி நகர்கிறது. இந்தக் குறிப்பு நிர்மலாவின் உணர்வு மீது படும் பார்வைகளை விளக்கிவிட்டு சோதனையின் மீது அதிக கவனத்தை செலுத்த வைக்கிறது. நாவலில் சோதனை, போராட்டம் முதலானவற்றை பேசப்பட்டாலும் அகவய உணர்வு தான் அதன் மூல ஆதாரம் என்பதை ஒவ்வொரு பகுதியும் நினைவுபடுத்துகிறது.


      பெண்ணைப் பற்றி பேசும்போது ஆணை கடந்து விட்டு பேச முடியாது. இதே நிலைதான் ஆணுக்கும். ஆண் என்பதாலேயே பெண்ணும் பெண் என்பதாலேயே ஆணும் பொருள் கொள்ளப்படுகின்றனர். அமைப்பில் முறைப்படி ஒன்றை வேறுபடுத்தி காட்டுவதன் வழியாகவே மற்றொன்றுக்கு அர்த்தம் ஏற்படுகிறது. காதல் என்று வரும்போது பாலினரீதியில் இருதரத்தாரும் வேறுபட்ட சந்தர்ப்பங்களையும் பிரச்சனைகளையும் அனுபவங்களையும் அடையும் வகையில் சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சில அடிப்படையான தொடக்கநிலை உணர்வுடனான மூலப் போராட்டம் இருதரத்தவருக்கும் பொதுவானதாகும். அதன் அளவு வேறுபடுகிறது. சங்க இலக்கிய சமூகத்தில் இருந்து நவீன சமூகம் அடைந்திருக்கும் மாறுதல் என்பது பெண்களை மையம் கொண்டு பாடப்பட்ட பாடல்கள் இங்கே ஆணுக்கும் பொருந்துவதாக அமைவதே ஆகும்.


    தனிமை பற்றிய விரிவான காட்சிகளை புயல் நாவல் கொடுத்தாலும் ‘திரிசங்கு சொர்க்க’த்தில் வரும் ஒரு வரியை வெளிப்படையாக அச்சு பிசிறாமல் நாவலில் காண முடியாது. இத்தன்மையே நாவலுக்கும் சிறுகதைக்கும் இடையிலான வித்தியாசமாக இருக்கிறது. ‘’நான் ஏன் இந்த உலகில் தனியாயிருக்கிறேன்? நான் ஏன் என் பெற்றோர்கள் மீது உடன் பிறந்தார் மீது பற்றற்றவனாய் மாறி வருகிறேன். எனக்கென்ன நேர்ந்தது? அப்படியானால் நான் யாருடைய ஆசைக்காக பாசத்திற்காகத் திரிகிறேன்? இது அவனறியாமல் அவன் உள்ளம் தேடித் திரியும் கேள்வி’’ இந்த இடத்தை சொற்களாக்கியதில் ரகுநாதன் தேர்ந்த கலைஞர் ஆகியிருக்கிறார். தன்னைச் சுற்றி அக்கறைப்படும் பலர் இருந்தாலும் தன்னை அறியாமலே ஆணுக்கு பெண் மீதான தேடலும் பெண்ணுக்கு ஆண் மீதான தேடலும் ஆட்கொள்கிறது. ஆண், பெண் என்ற பொதுமைப்படுத்துதலுக்குள் ஆண், பெண் என்ற சிறப்பு அடையையும் சேர்க்க வேண்டியுள்ளது. வெறுமனே ஆண், பெண் எனுமிடத்தில் தேடலுக்கு இடமற்று போகிறது. விருப்பம், காதல் என்ற அகவுணர்வே தேடலுக்கும் அர்த்தம் கொடுப்பதாக உள்ளன. அறியாமல் குவியும் பற்றுக்கும் பற்றிலிருந்து ஆன்மாவை விலக்காது உடலை மட்டும் விளக்குவதில் அடையும் போராட்டத்தையும் பேச விளைந்த சிறுகதை, தன்னுடைய இயலாமையால் நினைத்ததை அவசரகதியில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதிவு செய்கிறது.


     மனிதர்களின் வெற்றி என்பது இலக்கை அடையும் மகிழ்ச்சியிலேயே இருக்கிறது. இந்நாவலில் கன்னிமையைக் காப்பது இலக்காக? அல்லது ஆன்ம இறைநிலையை அடைவது இலக்கா? என்பதில் ஏற்பட்ட குழப்பம் இப்படைப்பு தோன்றியதற்கான தோற்றுவாயாக இருக்கின்றன. தொழிலில் வெற்றி அடைந்தாலும் இன்பமயமான வாழ்வு கிடைப்பதில் தோல்வியடைந்த பெண்ணாகவே நிர்மலா காணப்படுகிறாள். தற்போது நடுத்தர வர்க்கத்தின்  பெரும்பாலான குடும்பங்கள் சாதியாலும் உறவின்முறைகளாலும்  நிராதரவுபட்ட அதிருப்தி நிலையை அடைந்து வருகிறது. திருமணத்தில் இணைய விரும்புவோரிடம் வருமானம் முதலான பொருளாதார காரணங்களில் உங்களுக்கு திருப்தி என்றால் மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் நிலை உருவாகி வருகிறது. 


        நிர்மலாவை விடாது துரத்துகிறது இயற்கை. இயற்கை தான் உருவாக்கும் எல்லா பொருட்களையும் விளைய வைக்க விரும்புகிறது என்ற உண்மையை கன்னிகா நாவலில் இருந்து மறைமுகமாக அடைய முடிகிறது. புதிதாக ஒன்றை விளைவித்துவிட்டு பழையவற்றை தன்னிடம் திரும்பப்பெறும் சுழற்சியை நடத்தும் இயற்கை நிர்மலாவிற்கு சுகம் கலந்த வேதனையை கொடுக்க முயன்றிருக்கிறது. சிறுகதையின் தொடக்கத்தில் ‘’இந்த சுக வேதனை அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவள் எழுந்திருக்கவில்லை. மனம் நிமிர்ந்தாலும் உடல் நிமிரவில்லை’’ என்பதாக சொல்லப்படுகிறது. இந்த மனம், ஆன்மா மற்றும் உடல் ஆகியவற்றின் வேதனையை நாவல் நிகழ்ச்சிகளாக மாற்றியிருக்கிறது. கதையின் இறுதியில் ‘’தன் மனம் மாறுதலுக்கு காரணம் இயற்கை தான் என்று உணர்ந்தாள். ஆனால், இயற்கை வஞ்சித்ததா? இல்லை வாழ்வித்ததா? அது அவளுக்கு தெரியாது. இருந்தாலும் அவள் அந்த சுகத்தில் ஆனந்தம் கொண்டாள்.’’ என்ற இடத்தில் மனக்கட்டுப்பாட்டை உடல் மீறக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும் போது இயற்கை கட்டுப்பாடுகளை உடைத்து  தனது செயல்பாடுகளை தொடங்குகிறது. ‘’இயற்கை வஞ்சித்ததா?’’ என்ற கேள்விக்குப் பின் தான் இதுவரை கண்ட சோதனைகளில் அடைந்த வெற்றியும் தற்போது கிடைத்த தோல்வியால் விளைந்த சுக அனுபவமும் பின்னிக் கிடைக்கிறது. 


   இளமையில் நிர்மலா சீதாராமன் மீதும் அவன் கவிதையின் மீதும் கொள்ளும் காதல் இயல்பானது. இயல்புக்கு மீறிய போராட்டத்தின் விளைவால் சீதாராமன் மகன் ரங்கநாதனை தனது அந்திம வயதில் கன்னிமை  விலக தழுவுகிறாள் நிர்மலா. ‘’இரண்டுகெட்டான் வயதில் எழும் காதல் போராட்டம்’’ மற்றும் ‘’இளைமை தேடி ஆண்மை பெருகி சந்தித்த இடம் திரிசங்கு மண்டலம்’’ என்ற இரண்டு வரிகள் திரிசங்கு ராஜாவின் இரண்டுகெட்டான் நிலையை நினைவுபடுத்துகிறது. தக்கவயதில் தக்க செயல்பாடுகளுக்கு மனதையும் உடலையும் ஒத்துழைத்து கடக்காமல் வம்படியாக நின்றால் இயற்கை காலத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் இப்படியான இரண்டும் கெட்ட இடத்தில் நம்மை நிறுத்திவைக்கும். எது எப்படி இருப்பினும் திரிசங்கு அடைந்தது சொர்க்கம் தானே என்று நீங்கள் கருதினால் அந்த கருதுகோலுக்கு எதிராக நாக்குகளை வாள்போல கூர்தீட்டி வெட்டுவதற்கு சமூகமும், மனத்திற்கும் உடலுக்கும் இடையில் மனிதனும் மற்றுமோர் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். 


    சிறுகதை மற்றும் நாவலில் வரும் ஒத்த இடங்கள் பல உள்ளன. அதில் ’’காரிருளில் ஒரு கன்னிகை’’ என்ற திரைப்படம், ஷேக்ஸ்பியர் வயதுக்கு மூத்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட செய்தி, ஆல்பிரட்.எச்.மைல்ஸின் ‘’காதலும் பிராயமும்’’ கதை, மின்சாரம் போனபோது இருளில் வயது குறைந்த ஆண் கதாபாத்திரத்திற்கும் வயது மூத்த பின் கதாபாத்திற்கும் இடையில் நிகழும் தொடுதல் போன்ற பகுதிகளை இரண்டுக்கும் பொதுவானதாக கருதலாம். ‘’திரிசங்கு சொர்க்க’’த்தில்  நிர்மலாவைத் தழுவுவது சீதாராமன் என்ற இளம்ராய காதலியின் மகன் ரங்கநாதன். கன்னிகா நாவலில் கமலாவைத் தழுவுவது இளம்பிராய காதலன் சுகுமாரனின் தம்பி பாலன். இதில் சீதாராமன் மற்றும் சுகுமாரன் ஆகிய இருவரும் கவிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.( கவிதை எழுதுபவர்களே கவிஞர்களே இப்போதையேனும் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளுங்கள். கவிதை எழுதுவதை கொஞ்சம் நிறுத்த பிரயாசப்படுங்கள்.) 


      இப்போது கன்னிகா நாவல் குறித்து பார்க்கலாம். திரிசங்கு சொர்க்கம் கதையில் சீதாராமன் மட்டும்தான் வருவான். அதாவது மனதை கொள்ளை கொள்ளும் காதலன் மட்டுமே வருவான். நாவலில் மனங்கவர் காதலனாக சுகுமாரனும் உடல் பற்றிய கமலாவின் சோதனையை நிகழ்ச்சியாக மாற்றுவதற்கு பாலுவுமென இரண்டு கதாபாத்திரங்கள் வருகின்றனர். மேலும்  ‘கன்னிகா’வில் வரும் லலிதா, ராமு ஆகிய இரண்டு கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படும் செய்தியை ‘’புயல்’’ நாவலின் போது பார்க்கலாம். 


      பெண்களை பருவ கால அடிப்படையில் ஏழு வகைகளாகப் பிரிப்பர். அதில் ஆறு பருவங்களை ஐந்து வயது தொடங்கி 35 வயது வரை 5 வயதாகக் கூட்டி ரகுநாதன் இந்த நாவலை பிரித்துள்ளார். இந்த பிரிப்பு முறை முதன்மை கதாபாத்திரமான கமலாவின் வாழ்வில் அந்தந்த வயதில் நடக்கும் நிகழ்ச்சிகளை குறிப்பிடும் வண்ணம் அமைந்துள்ளது. உலா இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பெண்களை ஐந்து வயது முதல் ஏழு வயது வரை  பேதை, எட்டு வயது முதல் பதினொன்று வயது வரை பெதும்பை, பன்னிரண்டும் பதின்மூன்றும் மங்கை, பதினான்கு வயது முதல் பத்தொன்பது வயது வரை மடந்தை, இருபது வயது முதல் இருபத்தைந்து வயது வரை அரிவை,  இருபத்தாறு வயது முதல் முப்பத்தொன்று வயது வரை தெரிவை, முப்பத்திரண்டு வயது முதல் நாற்பது வயது வரை பேரிளம் பெண் என்று ‘’இலக்கண விளக்க பாட்டியல்’’ கூறுகிறது. ரகுநாதன் சீரான பிரிப்பு முறையில் ஒவ்வொரு பருவத்தையும் ஐந்து  ஐந்தாக பிரித்திருப்பது குறித்து முன்னுரையிலும் தெரிவித்துள்ளார். வீதியில் உலா வரும் நாயகனைப் பார்த்து ஏழ் பருவ பெண்கள் இன்புறுவதை உலா இலக்கியம் கூறுவதைப் போன்று பெண்ணின் மனதில் உளன்று உலா வரும் எண்ணங்களை கன்னிகா நாவல் பேசுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெண்ணின் முதிர்ச்சியைக் குறிக்கும் வண்ணம் பேதையில் குலோத்துங்க சோழன் உலா, பெதும்பையில் கடம்பர் கோயில் உலா, மங்கையில் ஏகாம்பரநாதர் உலா, மடந்தையில் தஞ்சைப் பெருவுடையார் உலா, அரிவையில் ராஜராஜ சோழன் உலா, தெரிவையில்  விக்கிரமசோழன் உலா பாடல்கள் இடம் பெற்று இருக்கின்றன. நாவல்களின் அத்தியாயத் தொடக்கத்தில் ஏதேனும் ஒரு கவிதையோ அல்லது கவித்துவ வரிகளோ  இடம்பெறும் முறை வழக்கில் உண்டு. அதேபோன்று கன்னிகா நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் உலா பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இப்படியான முறை தமிழ் நாவலுக்குள் வந்தது எப்போது? இதை அறிமுகப்படுத்தியவர் யார்? முந்தைய நாவல்களில் இருந்து தற்போது வரை இந்த முறை பரிணாமம் அடைந்த விதம் முதலியன தனித்து எழுதப்படும் அளவு விரிவான செய்திகளை உடையவை. 


      கன்னிகா நாவலின் தொடக்கம் சுவாரஸ்யமானது. நடராஜன் எழுதிய ஆயிஷாவின்  கதையில் ஆயிஷா விஞ்ஞான ரீதியான புறவய கேள்விகள் மூலம் சுவையளிப்பது போல கமலா இங்கு அகம் சார்ந்த கேள்வியை புறவய வெளிப்பாட்டு முறையில் கேட்கும் பெண்ணாக கமலா இருக்கிறாள். பாலினக் கட்டமைப்பை சமூகம் மேற்கொள்ளும் விதத்தை ‘பால்சாக்’ கதை ஒன்றின் மூலம் ஆதாம் ஏவாளை சுட்டி ரகுநாதன் எழுதியுள்ளார். கமலாவின் கேள்விகள் எல்லாம் சமூகம் கட்டமைத்து வைத்துள்ள பாலினக் கட்டமைப்பின் மீது ஒருபுறமும் இயற்கையின் இனப்பெருக்க உற்பத்திக்கான வாயில்களான இருவகைப்பட்ட பால் மீது மறுபுறமும் தொடுக்கப்படுகின்றன.


       பேதைமை பயமற்று பல கேள்விகளை எழுப்பும் பருவம். பேதைமையில் கேட்கப்படும் கேள்விகளெல்லாம் வெள்ளந்தித் தன்மை வாய்ந்தன. குழந்தைமைக்குரிய பாவனையோடு வெளிப்படும். இத்தகைய கேள்விகள் அனைத்தும் ஒரு கணம் நம்மை சிந்திக்க வைப்பன; திடுக்கிட வைப்பன; அதிர்ச்சி தருவன; இப்படியெல்லாம் கேட்கக்கூடாது என ஒடுக்குவன; சிரிப்பை வரவைப்பன. ஒரு நோய் வருகிறது எனக் கொள்வோம். அதற்கென்று எவ்வித மருத்துவ சோதனைகளையும் மேற்கொள்ளாதிருக்கும் வரை அல்லது அந்த நோயை குறித்த  முந்தைய அறிமுகமும் இல்லாதவரை பயமும் மனசஞ்சலமும் நம்மை பிடிப்பதில்லை. வந்திருப்பது உயிர்க்கொல்லி நோய் என அறிந்த மாத்திரத்தில் மனதால் சாக ஆரம்பிக்கிறோம். கொரோனா வந்தபோது பல மரணங்கள் அப்படி நிகழ்ந்தன. அதற்கு முன் காலராவின் போதும் அதே நிலை தான். ஜிம் கார்பெட் எழுதிய ‘’எனது இந்தியா’’ நூலை தமிழில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்துள்ளார். அந்த நூலில் ‘’காலராவால் செத்தது பாதி பேர், காலராவின் பயத்தில் செத்தது பாதி பேர்.’’ என்று ஜிம் கார்பெட் பதிவு செய்கிறார். பொதுவாக சில விடயங்களை தெரிந்து கொள்ளாமல், அறியாமல் இருக்கும்வரை எத்தகைய தேவையற்ற சிந்தனைகளும் நம்மை அண்டுவதில்லை என்பதையே பேதை பகுதி   தொனிக்கிறது. இதனை. ‘‘அறிவின் கறை படியப்படிய பேதைமை மறைந்து கொண்டே வந்தது’’ என்கிற முதல் அத்தியாயத்தில் இடம் பெறும் வரியின் மூலம் அறியலாம். 


     கமலாவுக்கு எழுந்த  கேள்விகள் என்னென்னவென்றால் ஏன் ஆண்கள் குதிரை பொம்மையிலும் பெண்கள் சொப்பு சாமானிலும் விளையாட வேண்டும்? குழந்தை எப்படி பிறக்கிறது? பறைச்சியை ஏன் தொடக்கூடாது? காதலுக்கும் கல்யாணத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்ன? காதலுக்குள் உடலும் அடங்குமா? அல்லது ஆன்மா மட்டும்தான் காதலா? என்று பலவகைபட்டன. இக்கேள்விகள் எல்லாம் முன்னர் குறிப்பிட்ட இரண்டு வகைக்குள் அடங்குவன. கேள்விகளுக்கான விடைகள் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் ஒவ்வொன்றாக கிடைக்க தொடங்குகின்றன. ‘‘கதைகளிலிருந்து எவ்வளவோ நல்ல விஷயங்களையும் தெரியாத விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்று தோன்றியவுடன் கதைப்புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தாள்.’ ’என்ற வரி வருகிறது. இதில் இலக்கியம் எப்படி வாழ்வதற்கான திறப்பாக அல்லது வாழ்க்கையின் போது எழும் கேள்விகளுக்கு திறப்பாக அமைகின்றன என்பதை அறியலாம். கன்னிகா நாவல் காதலுக்கும் காமத்திற்கும் இடையிலான இடைவெளியோடு காதல் என்பது மனத்துடன் உடலும் சம்பந்தப்பட்டது என்கிற உளவியல் ரீதியான உண்மையையும் உணர்த்துகிறது. மனிதனின் அனிமாவில் சித்தரிக்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் கொண்ட எதிர்பாலினம் மீது மட்டுமே ஈர்ப்பு வரும் என்பது உளப் பகுப்பாய்வியல் சொல்லும் கருத்து. இதன் பொருத்தப்பாட்டை சுகுமாரன் மற்றும் பாலன் இடையே பொருத்தலாம். இதில் ‘’நல்ல விஷயங்கள்’’ என்ற ஒரு வார்த்தை உண்டு. ஒரு விஷயத்தை நல்ல விஷயம் அல்லது கெட்ட விஷயம் என தீர்மானிப்பது சமூகமும் ஆசையுமே. தான் ஆசைப்படுவதை நல்ல விஷயங்கள் என்றும் சரியானவை என்றும் வாதிடும் குணம் இயல்பாகவே மனிதர்களிடம் உண்டு. இங்கு ஒவ்வொரு மனிதனின் மனநிலைக்கு ஏற்ப நல்ல விஷயங்கள் உற்பத்தி ஆகின்றன. கமலாவின் ஆசை ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் இணைப்பது நல்ல விஷயம் என்று நம்பி அதன்படி வாழ்ந்தாள். அது நல்ல விஷயமாகவே இருந்தாலும் கூட பாலுவை வெறிபிடித்த நாய் என சொல்லும் இடத்தில் அவள் நம்புவதை தவிர்த்த பிரிதொன்றை தீமையாக பார்க்கத் தொடங்குகிறாள். ஆண்டாளை ஒருவேளை கமலா முன்மாதிரியாக கொண்டிருக்கலாம். ஏனென்றால் கமலா மனம் மாறும் இடத்திலும் ஆண்டாளின் பாடலே வருகிறது. கமலா ஆண்டாளைப் படித்து தனக்கான நல்ல விஷயத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்றாகிறது. 


    ஆண்டாள் பாசுரங்கள், பாரதியார் பாடல்கள் என தெரிந்து வைத்திருந்த செய்திகள் எல்லாம் அவளை குழப்புகின்றன.  மகாசுவேதை-புண்டரீகன்,  அகலிகை-இந்திரன்-கௌதமன், சீதை-ராவணன்-ராமன், சூர்ப்பனகை-ராமன், கீசகன்-சைரந்திரி, ராமன்-சீதை, துஷ்யந்தன்-சகுந்தலை, ரோமியோ-ஜூலியட், காயிஸ்-லைலா, சந்திராபீடன்-காதம்பரி என்ற குழப்பங்களையொட்டிய சரி தவறென்ற கற்பனைகள் தோன்றி அதில் கமலா மூழ்குவதற்கு அறிதலே  காரணமாகின்றன. மன்மத விலாசம், சுகுமாரனின் கவிதைகள் ஆகியனவும் இதில் அடக்கம்.  தர்க்க சாஸ்திரம் கற்றபோது அதிலுள்ள ஆறு வகைகளை தனது கேள்விகளோடு ஒப்பிடுதல்,  ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தல்,  ஆல்பிரட்.எச்.மைல்ஸின் காதலும் பிராயமும் கதை, ஹரீந்திர சட்டோபாத்தியாயாவின் அந்தி விளக்கு முதலாக தான் அறிந்தவை அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலைக்கு மனதளவில் கமலா  தள்ளப்படுகிறாள். அறிதல் ஒப்பிடுதலை நோக்கி கமலாவை நகர்த்துகிறது.


  கமலாவுக்கு இருந்த குழப்பங்களில் ஒன்று யாருடைய அன்புக்காக ஏங்குகிறேன் என்பதும் அன்பானது உள்ளத்தை மட்டுமே மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்கிற ஆசையுமாகும். உடல் என்பது அசுத்தம், பாவம் என்றும் உள்ளம் அழகானது பவித்திரமானது என்ற நம்பிக்கைசார் குழப்பம் கமலாவுக்கு இருந்ததை ‘‘உடல் மீது மட்டும் ஆசை கொள்வது பாவம். அந்த பாவத்திற்கு பெயர் காமம், உள்ளத்தின் மீது மட்டும் ஆசை கொள்வது காதல். அது புண்ணியம் அப்படித்தானா?’’ என்ற கேள்வி அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்ததன் மூலம் அறியலாம். இரண்டுமே சேர்ந்ததுதான் காதல் என்பதை அவள் அறிவதற்கு வெகு காலம் தேவைப்பட்டது.


     இயற்கை(மரம் செடி மலர் சந்திரன், சூரியன்) இன்புறுவதும் துன்புறுவதுமாக இருப்பதை  உற்றுநோக்கும் கமலா எது இயற்கை? என்பதை கற்றுக்கொள்ள தவறிவிட்டாள். மறுபுறம் கமலா விரும்பிய உள்ளத்தை மட்டுமே காதலிக்கும் கவிஞர் சுகுமாரனுடன் பழக்கம் ஏற்பட்டு பிரிவு நிகழ்கிறது. குற்றாலத்தில் நிகழ்ந்த சந்திப்பில் பாறையில் பெயர் எழுதும்போது ஏன் ஸ்ரீமதி சுகுமாரன் என எழுதக்கூடாதா? ஸ்ரீமான் கமலா என்றுதான் எழுத வேண்டுமா? என்ற  சண்டை சிற்றருவி பாறையில் நிகழ்கிறது. இது கமலாவின் பெண்ணுரிமைக் குரல்.  கமலா என்ற பெயரை ரகுநாதனின் ‘‘பஞ்சும் பசியும்’’ நாவலிலும் பார்க்கலாம். அந்த கதாபாத்திரமும் இப்படி உரிமைக்காக குரல் கொடுக்கும் பலவித நூல்களை படிக்கும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இரண்டு கதாபாத்திரங்களும் படிக்கும் நூல்கள் வேறு வேறு தன்மையுடையன. நூலின் தன்மைகள் கதாபாத்திரங்களின் செயல்பாட்டில் வெளிப்படுமாறான படைப்பு முறையை ரகுநாதன் தனது நாவல்களில்  பயன்படுத்துவது தெரியவருகிறது .


    ‘‘காரிருளில் ஒரு கன்னிகை’’ படம் ப்ராய்டிய மனவாராய்ச்சி தொடர்பான படம் என்று நாவலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ப்ராய்டு என்றால் உளபகுப்பாய்வியல் எனும் போது, இந்த நாவலை உள பகுப்பாய்வுக்கு உட்படுத்தலாம். அதற்குரிய இடமாக ஓநாய் பிராண்டும் பகுதி இருக்கிறது. வயது மூத்த பெண் வயது குறைந்த ஆணை திருமணம் செய்து கொள்ளலாமா? என்ற குழப்பம் கமலா, பாலன் ஆகியோரிடையே எழுகிறது. இந்திய சமூகத்தில் வாழும் சில பிரிவினர்களிடையே இருந்த வினோதமான ஒரு பழக்கத்தை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பத்து வயதுக்கு மேலான பெண் தனக்கு கணவன் பிறப்பதற்காக காத்திருந்ததும் பிறந்த குழந்தையை ஏழு வயது பெண் தன் கணவனாக வரித்துக் கொண்டதும் இந்தியாவில் நடந்திருக்கிறது. இவ்விடத்தில் பண்பாட்டு மாறுபடுதல் பற்றிய நோக்கையும் செலுத்தி பார்க்கலாம். திருமணத்தை மையமிட்டு நிகழும் பண்பாட்டு மாறுதலை மனித மனம் ஏற்க போராடும் போராட்டமாக பகுதியை அணுகலாம் .


      லலிதா ராமு ஓடிப்போனது, கமலா ஆசிரமத்தில் வேலை பார்த்தது போன்ற செய்திகள் எல்லாம் தனியாக பேசப்பட வேண்டியனவல்ல எனினும் கதையில் முக்கியமானவை. ஹாவ்லாக் எல்லீஸுடைய உடற்கலப்பு தத்துவம் அந்த இடத்தை நிரப்பி விடுகிறது. கல்யாணம், புனிதம், காதல், தீட்டு என்ற நிலை காதல், புனிதம், காமம், தீட்டு என மாறி இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பதாக மாறுகிறது கேள்விகளை கேள்விகளால் எதிர்கொள்வதும் புலம்புவதும் மீள்வதும் மீண்டும் புலம்புவதும் தயக்கமின்றி முயல்வதுமென இந்நாவலை சில செயல்பாடுகள் கொண்டு முழுமையாக அடக்கி வரையறுத்து விட முடியும்.


       செப்டம்பர் 1945ல் வெளியான ரகுநாதனின் முதல் நாவல் புயல். இந்நாவல் சொல்லிக் கொள்ளாத காதலையும் காதலைச் சொல்லும் போது சேர முடியாத நிலையையும் இதற்கிடையில் தீராத தனிமையையும் பேசுவதாக உள்ளது. தனிமை, தனிமையிலிருந்து மீள்தல், நினைவுகள் மூலம் மீண்டும் அச்சுறுத்தப்படுதல், முடிவு எடுக்க தயங்குதல் என்று பல்வேறு அடுக்குகள் கொண்டதாக இந்நாவல் காணப்படுகிறது. குடும்பங்களில் இருக்கும் பெற்றோர்கள் தன் குழந்தைக்கு கொடுக்கும் சுதந்திரங்களில் உள்ள குறைபாட்டை மிக நுணுக்கமாக நாவல் பதிவு செய்ய முனைந்துள்ளது. கன்னிகா நாவலில் பேதமை பருவம் பேசும் ரகுநாதன் புயல் நாவலில் பேதைமையை வெளிப்படுத்த முடியாத பெண்ணின் மனநிலையை கதையின் தொடக்கத்திலேயே பதிவு செய்கிறார். என்னுடைய பெற்றோர்களின் எண்ணம் எனது இதயத்தில் எரிகின்ற ஒளியை மறைத்து அணைக்க முயல்கிறது. என் பேதையுள்ளம் அந்த இதயத்தினுள்ளே தான் வட்டமிட முடியும். அந்த உள்ளத்தைத் திறந்து வேறு யாருக்கும் காட்ட இயலாது. அப்படியே காட்ட முயன்றாலும், அது பிறருடைய மனத்திலும் பதியுமா என்பது சந்தேகம்.’’ என்று தனக்குள் நினைத்துக் கொள்கிறான்


     தன்னுடைய மனதில் உள்ள விருப்பத்தை உரிய நபர்களிடம் கொண்டு செலுத்த முடியாத இக்கட்டான நிலையில் கடவுள் ஏன் மனதை படைத்து அதில் எண்ணங்களை உருவாக்கி அதை வெளிப்படுத்த முடியாத  சூழலையும் கட்டமைத்திருக்கிறார் என்று ரஞ்சினி ஒட்டுமொத்த பெண்களின் சார்பாக நொந்து கொள்கிறாள். மனத்தை ஓரிடத்தில் நிறுத்துவதால் மட்டுமே நாம் நம்முடைய பாதையில் வெற்றி பெற முடியும் என்ற தத்துவத்தை தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து படிப்படியாக நிர்மலா காணத்தொடங்கும் வகையில் கதை நகர்கிறது. மேலும் திருமணம் என்பது மாப்பிள்ளை வீட்டார் வாங்கப்போகும் ஒரு பொருள் என்றும் அந்த பொருளாக பெண்கள் இருக்கின்றனர் என்றும் தனக்குள்ளேயே ரஞ்சனி  பொறுமிக் கொள்வதில் அர்த்தம் இருக்கிறது. பிறந்து வீட்டில் அடங்கி வேலை செய்யும் பெண் புகுந்த வீட்டில் அடங்கி வேலை செய்யப் போகிறாள். எங்கு போனாலும் அடங்கித்தான் இருக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை. மற்றொரு இடத்தில் தான் பெண்ணாய் பிறந்ததால் காதலை வெளிப்படுத்த முடியவில்லை. ஆணாகப் பிறந்திருந்தால் அதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என்று சொல்லி தன் இயலாமைக்கான காரணமாக பாலினத்தை ரஞ்சனி முன்னிறுத்துகிறாள். பருவமடையாத சிறுமியாகவே இருந்திருந்தால் அது எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணமும் ரஞ்சனிக்கு வருகிறது. இதே நிலையை கன்னிகாவில் கமலாவிடமும் காணமுடியும். இது மனிதர்களுக்குரிய பொதுவான மனநிலை. ஆண், பெண் வேறுபாடின்றி ஒட்டுமொத்த சூழலும் நெருக்கடிக்கு உள்ளாகும்போது இரண்டு எண்ணங்கள் தோன்றும். ஒன்று குழந்தையாகவே இருந்திருக்கலாம். மற்றொன்று தற்கொலை. இந்த இரண்டும் ரஞ்சனிக்கும் வருகிறது. 


      முதல் மனநிலையின் நிறைவேறாத தன்மை இரண்டாம் நிலைக்கு இட்டுச் செல்கிறது. நிகழ்கால துன்பங்களை மறக்க முந்தைய இன்பங்கள் நோக்கி மனம் பயணப்பட்டு பின் தற்போதைய துன்பத்திற்கு வந்து தோயும்போது தற்கொலை பற்றிய சிந்தனையும் உதிக்கிறது. இன்பத்தை நினைப்பது குழந்தை பருவமாகவும் அதில் ஏற்படாத நிறைவு தற்கொலை எண்ணமாகவும் ஆகின்றன. இந்த துன்ப மனநிலை உடலையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. உடலும் உள்ளமும் இணைந்தது தான் மனித வாழ்வு என்பதை தனது படைப்புகளின் வழியாக தொடர்ந்து பேசுபவராக ரகுநாதன் இருப்பதற்கு இவைகள் சான்று. திருமூலர் திருமந்திரத்தில் ‘‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’’ என்றே பாடுகிறார். இதிலுள்ள தத்துவார்த்த விளக்கங்களைக் கடந்து உடல் உயிர் என்ற இணைவை மட்டும் எடுத்துக்கொள்வோம் அந்த இணைவைத்தான். மனக்குழப்பத்தை கடந்து வந்து சித்தரிக்க ரகுநாதன் முயன்றுள்ளார். தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிகள் பசலை படர்ந்து இருப்பதை சங்க இலக்கிய பாடல்களில் அறியலாம். தலைவிக்கு மட்டுமல்ல தலைவனுக்கும்  பகலை வரும் என்பதை மரபிலக்கியங்கள் போதுமான அளவு பதிவுசெய்ய தவறிவிட்டன. அந்தக் குறையை நவீன இலக்கியம் பூர்த்தி செய்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக பிரான்சிஸ் கிருபாவின் ‘‘கன்னி’’ இமையத்தின் ‘‘எங்கதெ’’ போன்ற படைப்புகளை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நான் குறிப்பிட்டு இருக்கக்கூடிய நாவல்களை மரபிலக்கிய கொள்கைகளை வைத்து அணுகினால் பெருந்துணை கோட்பாடாகவே முடியும். இருந்தாலும் அதில் வரும் ஆணின் மனநிலையை மட்டுமே அடிப்படையாக வைத்து நாம்  சில உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். 


  ரகுநாதனின் ‘‘புயல்’’ நாவல் மனவேதனை உடலுக்கும் பரவுவதை பேசக்கூடியதாக இருக்கிறது. கவலை தோய்ந்த மனத்துன்பம், தனிமை, தற்கொலை, தயக்கம் முதலானவை நாவலின் உண்மையை வெளிப்படுத்தி தீர்வு நோக்கி நகர்த்தும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ளது. தனிமை தானாக எடுத்துக்கொள்ளப்படும் மருந்தாகவும் பிறரால் அளிக்கப்படும் போது நஞ்சாகவும் இருப்பதை பதிவு செய்வதோடு தனிமையில் உதிக்கும் சிந்தனையை பற்றிய விநோதங்கள் நிர்மலா மூலம் வெளிப்படுகிறது. தனிமையில் சிந்திப்பது வாழ்வில் ஒரு பகுதியாக மாறி வேதனையளிப்பதும் இதில் அடங்குகிறது. நிர்மலாவை கடந்து விட்டு கலை இயக்கப் பார்வையில் பார்த்தால் தனிமையில் உதிக்கும் சிந்தனையை கலைஞர்களும் படைப்பாளர்களும் வாழ்வாக வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டிருக்க வேண்டியது அவசியம். தனிமையில் உலவும் கதாபாத்திரங்களின் வார்த்தைகளில் இருக்கக்கூடிய வசீகரமே இவ்விடத்தை கலைஞர்கள் அல்லது படைப்பாளர்களின் தொழில் வினையோடு பொருத்தி பேச வைக்கிறது. கலைத்துவ ஆக்கத்திற்கு இத்தகைய சிந்தனைகள் உரம் போடுகின்றன. 


    தற்கொலையை பலவீனமாகவும் அதே சமயம் கணநேர தைரியமாகவும் ‘‘புயல்’’ நாவல் குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வகைப்பட்ட கருத்தும் மனோதத்துவ ரீதியில் மனவியல் அறிஞர்கள் பலரால் விவாதிக்கப்பட்ட கருத்து என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘‘கன்னிகா’’வில் கமலா புத்தகம் மூலம் பல்வேறு விடயங்களை தெரிந்து கொள்வதாக இருப்பதைப் போலவே இங்கு புத்தகங்கள் கவலைகளை மறக்கடிக்கும் சாதனங்களாக அமைகின்றன. ‘‘ஒருவேளை நைந்த உள்ளத்திற்கு சாந்தி அளிப்பது கவிதையும் கனவுந்தானோ என்னவோ?’’ என்று ரஞ்சனி நினைத்துக் கொள்கிறாள். 


     பிரிவைப் பேசும் இடங்கள் முக்கியமானவைகளாக படுகின்றன. பிரிவு இயற்கையானது. ஆனால் பிரியக்கூடிய மனங்களை காயப்படுத்தாததாக அமைதல் வேண்டும். பிரிதலின் போது சொல்லப்படும் காரணங்களும் பயன்படுத்தும் வார்த்தைகளும் யாரோ ஒருவரை ஆழமான படுகுழிக்குள் தள்ளலாம். குற்றணவுர்வெனும் நரகத்தில் வேக வைக்கலாம். மீண்டும் எழ முடியாதவாறு பெரிய தடி கொண்டு ஒவ்வொரு முறையும் அடிக்கலாம். இந்நாவல் பேசும் பிரிவு இதிலிருந்து வித்தியாசப்படுகிறது. ‘‘கன்னிகா’’வில் உள்ளவாறான உடல், உயிர் என்ற பகுப்பைக் கொண்டது. ‘’உலகில் பிரிவு என்பது இயல்புதான். மனித உலகத்தில் சிநேக பாசத்தால் கட்டுப்பட்ட உள்ளங்களின் உடல் பிரிகிறது. உயிர் பிரிவதில்லை. ஆவி கலந்த ஆன்மநேயம் உண்டானால், ஆவி பிரியாது; உடல்தான் பிரிய முடியும். ஆனால் மனித உள்ளமோ உடம்பின் மீது தான் அதிகமான நம்பிக்கையும் அன்பையும் வைத்திருக்கிறது. ஆன்மநேயத்தை அறிய பக்குவம் அதிகம் வேண்டும். அதனால் தான் பிரிவின் வேதனை பெரிதாக தோன்றுகிறது.’’  என்று  காதலில் மனத்தின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ரகுநாதன் பதிவு செய்கிறார்.  கன்னிகாவில் உடல் பற்றிய கருத்துக்களை விவாத பொருளாக ஆக்குகிறார்.


     காதலன் சந்திரசேகரன் கணவனின் நண்பன் என்றாகுவதும் சந்திரசேகரனை நினைவுபடுத்தும் விதமாக நிர்மலாவின் தோழி கடிதத்தில் அவனை குறிப்பிடுவதும் ‘‘கன்னிகா’’வில் வரும் லலிதா இராமுவை நினைவுபடுத்துகிறது. காதலித்து ஊரை விட்டு வெளியே வந்த பின் லலிதாவை பிரிந்து ராமு தனியே செல்கிறான். புயல் நாவலில் பிரச்சனையின் திருமணத்திற்கு முன் ரஞ்சனியை சேர்வதற்கு முயற்சி எடுக்காத சந்திரசேகரன் திருமணத்திற்கு பிறகு அவளை அடைய முயற்சி செய்கிறான். ரஞ்சனியோ உடன்வர மறுக்கிறாள். நாவலின் கடைசி பகுதியில் ஒரு சிறு தோல்வி கூட பெண்ணின் வாழ்க்கையை குலைத்துவிடும் என ரஞ்சனி தனக்குள் சொல்கிறாள். ஆனால் உண்மை அப்படியல்ல. தற்போதைய வாழ்க்கை முறையை ஒட்டிப் பார்த்தால் எதார்த்தம் வேறாக மாற்றம் பெற்றிருக்கிறது. ஆண், பெண் இருவரும் ஆழ துளைக்கக்கூடிய தோல்விகளால் காயப்படவே செய்கின்றனர். இலக்கின் மீது வைத்துள்ள ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்டே தோல்வியில் ஏற்படும் காயத்தை அளவிட வேண்டியிருக்கிறது. இதில் ஏற்கனவே நிர்மலாவுக்கு ஒரு அனுபவம் உண்டு. துன்பத்தை கடப்பதற்காகவே பல்வேறு வேலைகளில் ஆரம்பத்தில் ரஞ்சனி தன்னை ஈடுபடுத்தியதை சொன்ன ரகுநாதன் செய்யும் வேலையில் மனம் ஒருமைப்படாதவாறு துன்பங்களால் அலைக்கழிக்கப்படுவதை சொல்வதற்கு தவறிவிட்டார்.ரஞ்சனி தனது துன்பத்தை மறக்க வேலைகளில் மூழ்குவது என்பதைக் கடந்து மீனி என்கிற உயிருள்ள உணர்வுள்ள ஒரு குழந்தையும் தேவைப்பட்டிருக்கிறது. ரஞ்சனி  சந்திரசேகரனுடன் செல்லாததற்கு மீனுவும் ஒரு காரணம். காதலைத் தாண்டிய அன்பு ஒன்றின் ஆற்றலை மீனி, ரஞ்சனி மூலம் புரிந்து கொள்ளலாம். 


    ரகுநாதன் ‘‘புயல்’’ என்ற தலைப்பை கதைக்குள் கூறும் இடத்தில் இந்தியாவில் நிலவிய பீகார் பஞ்சம் மற்றும் கொள்ளை நோய்களை குறிப்பிட்டிருக்கிறார். தாகூரின் ‘‘குமுதினி’’ என்ற நூல் மரங்கள் சூழ்ந்த பிள்ளையார் கோயில், ‘புறவயமான ஆடம்பரங்களில் உள்ள ஒவ்வாமை தரும் நடுக்கம், அகலிகை, அருந்ததி, இந்திரன் என்று ரகுநாதன் வழக்கமாக தன்னுடைய படைப்புகளில் கொண்டிருக்கக்கூடிய அம்சங்களின் ஆரம்பமாக புயல் நாவல் தொடக்கத்திலேயே உருவாகியிருக்கிறது. சந்திரசேகரன் சீதையை அபகரிக்க வந்த ராவணனாகவும் அகலிகையை கற்பழிக்க வந்த இந்திரனாகவும் சுட்டப்படுகிறார். இது ரகுநாதனின் பாணி என்பதை கன்னிகாவை வைத்து அறியலாம். மற்றொரு இடத்தில் ‘‘அவளுடைய குறுநகை திரிபுரத்தை எரித்த சிவபெருமானின் புன்னகையில்லை. பவளக்காதலியை மயக்கிய பார்த்தனின் முறுவலாக இருந்தது’’ என்று எழுதுகிறார். இதே அம்சம் ரகுநாதனைப் போல கு.அழகிரிசாமியிடமும் உண்டு. இது  புதுமைப்பித்தனிடம் பெற்ற தாக்கம். ‘‘அளவு கடந்த அன்பினால் ஏற்பட்ட செல்வம் தான் கற்பு’’ என்ற ஒரு கற்பிற்கான வரையறையை சொல்லும் புயல், தோல்வியடைந்த காதலையும் குறிப்பிடத் தவறவில்லை. ‘‘காதல் என்பது குளிர்ந்த பூஞ்சோலையல்ல. காய்ந்து கருகிப்போன மூங்கில் காடு. அது எந்த நேரமும் பற்றி எரியக்கூடும்’’ என்ற ஒற்றை வரியில் நினைவுகள் செலுத்தும்  வலிமையான ஆதிக்கம் கோடு தீட்டி காட்டப்படுகிறது. ரஞ்சனி சந்திரசேகரனை நிராகரித்ததில் சமூகம் மீதான பயம் என்பதைத் தாண்டி தனது கணவனுக்கு ஏமாற்றம் தரக்கூடாது என்ற உள்ளுணர்வும் இருந்தது. இந்த உள்ளுணர்வு தான் புயலுக்கு பின்னான அமைதி. 


எடுத்தாளப்பட்டவை 


கன்னிகா, ரகுநாதன், காலச்சுவடு, 2017.

க்ஷணப்பித்தம், ரகுநாதன், மீனாட்சி புத்தக நிலையம். நவம்பர், 1980.

புயல், ரகுநாதன், மீனாட்சி புத்தக நிலையம். டிசம்பர். 1980.  

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM0lJhy#book1/27 ப.18



Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு