மயிர் விடு தூது -குவிரன்

 

மயிர் விடு தூது

                                                   -குவிரன்

பொலிவுறும்இம் மாபுகழ் உலகின் மீதே

நல்அழகுற மடந்தை   யர்கண்ணில் தென்பட

மைந்நிறம்போல் தன்னுடல் முழுதும் கொண்டாய்

சிந்தே என்இனிய நல்மயிரே நீயே

அங்கம் சூழ்நிறைந் தாய்என் றாதலால்

நான்உனை மறத்தல்நன்‌‌ றாகுமோ நின்றிடஞ்சொல்

செல்இடம் அனைத்தும்‌‌ மீகதிர் ஒளிவீச

யான்நடந் திரிய நீஅமைந்தாய் வேறொருவர்

போற்றிப்பா டத்தான்வேண் டுமோபா ரில்உனை

பழிப்பார் என்றிருந்தால் பேதையென யாவரும்

இனம்கண்டு கொள்வார் நிச்சயம் சிரமின்றி

போனாலும் அத்துயர் நொடிஒன்றே நின்னிழந்

தவர்க்கு நித்தம்நித்‌‌ தம்துயர் மறுப்பார்

யாருமிலர் அன்னை அன்றாடக் காத்திட்ட

ஆருயிர்அன் பெலாம்நீ  பெற்றிடும் கவனிப்புக்

கெல்லாம் எங்கோ தூரத்தொ லைவே

பச்சிளங் குழந்தை போல்பேணி நாள்தோறும்

நேரவிரையம் உனக்காய் செய்கையிலே என்மனதில்

நீகொண்ட பேரிடம்தான் என்னஎன்ன என்பதையே

காரிருள் அறிகுவையோ வன்தறியில் சிக்குறா

பட்டியிழை யல்லவோ வெண்பட்டுபூச்சிக்கே

நின்நிறத் தினின்மீது கொள்ளைபி ரியம்தான்

சாயமேற்றி டாபொலி யுறும்வனப்பில் அல்பகலாய்

கண்சொக்க்இ டவார் யாருமிலை நீள்குறு

எனும்உன் பூம்பொழில் அமைவில் ஆயிரமாம்

சித்திரப் படைப்புசெய்துகண்ணாடி முன்களைத்த

எம்தோள் கள்இரண்டும் சொல்கிறதே நின்மதிப்பு

பின்தலையில் பின்னலிட்டுபோக காரிருள்

திரித்து செய்கணக் கயிறாய் மாறினாய்

கொல்லன்வெஞ் சூட்டில் உருகி யோடும்

பொன்னென நின்னைகை விரல்கோதிட நழுவின்

ஆய்குளம் அருவியா றுவான் வீழ்மழை

கடல்நதி எனப்பெயர் பலவும் கொண்ட

நன்னீர்போல் நின்வளர் இடம்குறித்தே மீசைதாட்

இக்கூந்தல் மாற்றிடங்களில்மயிர் யெனபொதுப்

பெயர்நீ பெற்றாய் முக்கிய‌ உறுப்பெனஇந்

நாளிலே மாற்றம்கண் டாய்அடர் இருள்உருக்கி

ஓடவிட்டாற்‌‌ போல்விரிந்த கூந்தல் பாய்மரப்

படகுஅலை மேல்அசைந்தா டும்போன்ம் மாளிகை

அரசியும் தலைமயிர்இன் றிபோயின் அம்தலை

மறைத்து வாழ்வதே ‌வேண்டிவிரும்  புவார்

மானம் என்பது உடுத்திடும்நல் மேல்கீழ்

ஆடையிலே உள்ளதென்ப இன்றுமாறி மொட்டை

மண்டை கொண்டுவெ ளியில்நடந் திரிந்திட

தயங்குவார் ஆடவரே ஆயினும் ‌வளர்இளம்

பருவம் தாண்டி யும்முறுக்கு மீசை

வேண்டா புல்லிலை யினைஒத் தமீச்சிறு

மயிர்அரு ம்பாவீடில்ந கைப்புக்குள் ளாகி

போயிடுவார் அத்துனை சிறப்பமை பெறல்உனை

விடுத்தே வேறெவர்க்கு வாய்க்கும் இன்மயிரே

ஓங்கி வளர்உரோமம் நாள்தொறும் தவறாகூர்

கத்திகொண்டு யான்சரித்தா லும்மண் முட்டியெழுந்

திடும்அரும்  பயிரென வளர்கிறாய் மண்உரங்கேட்

கும்எதைநீ கேட்டாய் திண்ஆகா ரம்தாண்டி

கூன்கிழவி கண்குரு டுமூதுகி ழவன்என

வயதுகூ டியே போகுங்கால் பாம்புஉரிக்

கும்சட்டை போல்உன் கார்முகில் நிறமாறும்

ஆழி வெண்சங் கையே மிஞ்சிடும்

அளவினாற் வெண்மைநிறம் பட்டுத்தெரி த்திடும்

பல்விண்மீன் தூளின் கூட்டமைவு பொன்னொளி

அவதாரம் எவ்வுடலின் மீதினில் எடுக்கிறாய்

வீழ்அருவி வெள்ள்ஒளி கவின்நற் காட்சி

மீஎழில்யா வும்நரை கிழவிஅவிழ்த் தகூந்தல்

நுண்பொழு தினில்தவி டுபொடியா கும்என

மொழியும் என்மனமும் மாபுகழாய் கேட்டிடுக

பேரிளம்பெண் ஆயினும்உன் மேற்கொண்ட மோகம்

கால்அளவும் நுண்கடு களவும் குன்றவில்லை

பூக்கும் வண்ணமல ரெல்லாம் கூந்தல்வந்

தேறுவத னாலேபூ வென்றுநம்பு கிறேன்அன்

றிகாய்த்து வீழ்சருகு எத்தன்மை யோஅஃதே

கூந்தல் வந்தமரா பொன்மலர் இதுமெய்யாம்

பல்மணிநேர ம்சிகை அலங்காரம் செய்திட

விலைமதிப்பில் காலமெலாம் ஈகிறேன் மாமயிரே

என்றைக் கும்மதி யில்மனிதர்சிற்சிலர்

உனைகெட்ட வார்த்தை யென்றுமொ ழிகிறார்

வெஞ்சினம்கொண்  டேகணப் பொழுதில் திறந்து

நீயென் னேபெரிய மயிரா கேட்கும்

சொல்எலாம் தம்தம் ஆழ்ந்தஅறி வின்மையே

தானே உந்தனை முழுதாய் யான்தெரிந்துள்ள்

ஏன்ஆகை யினாற் என்மொழிக்கு கொஞ்சமே

கூர்செவி யினைசாய் என்உற்ற கார்மயிரே

ஆழ்மன கிடக்கை உன்னிடத் தவிழ்த்திடுகி

றேனே கேளாய் நன்று தீதறியா

யான்நித் தம்சவரக் கத்தி கொண்டுமயிர்

வெட்டிடும்தொ ழில்தேர்ந்து செய்தேன் இன்றளவும்

அன்றாடம் வந்துஅமர் வாடிக்கையா ளர்சிரசு

கன்னத்தில் கூர்தகடு கத்தரிக்கோல் என்றிவை

இரண்டும் வைத்து மந்திரவித் தைஏதுமின்

வல்கைத் திறதாலே மன்மத னிவனென

குழப்பிடும் பெறும்நாவி தன்யா னேஎன்

திண்கை தோள்கொண்டு சீர்த்தன்தொ ழில்வன்மை

பாடத்தான் பல்நூறு பாக்கள் வேண்டும்

கார்வெண் மாமயிர் நடுவே யான்இதுகா

றும்பழகி னேன்கரம் இரண்டில் அன்றாடம்

செவ்விரல் இடையூடி ஓடிதிரிந் தாய்மயிர்

அனையாய் வாகனங்கள் சாளரக்கண் ணாடிமேல்

வீழ்நீர்து டைக்கும் எந்திரக்கை போல்தகடு

வாடிக்கை யாளர்கன் னங்களில் வருடிடும்

மயில்பீலி கையே தோற்றிடும் இவண்கை

செய்திறத்தினில் அடர்தாடி மீசைமலித் தினம்வாழ்

போன்இவன் வளர்நீள் தாடிமார் புக்கூடு

தொட்டு தட்டிக்கொடுத் திடும்தொனிதாய் சேயினை

கிடத்தியத்தற் கொப்பாம் காரிருள் சுருள்முடி

கழுத்துவரை யேஉரசி கூத்தாடும் பந்தயக்

குதிரையை நகலெடுக்கும் அக்காட்சி நின்நிதம்

இறைநினைந்தே சடாமுடி தரித்தவரும் நன்னுடல்

முழுதும் நுண்மயிர் முதலா இல்லாதூ

வெண்துறவர் இங்குஅற வேஆகா சீர்திருத்தம்

என்றுதமிழ் மாநிலம்கண்  டிடாவி டில்இக்

கூர்சவரக் கத்தியினான் வாழும் நாவித

நலிவாழ்வு மென்மே லும்நசிந்து போயிருக்கும்

நீள்குடுமி வாரிகட்டி யேமுடித் திருத்தவா

ராதிருந் தனர்அடையா ளம்என்றே நம்பி

பேணிக் காத்திட்ட பாழ்குமுக த்தில்பெரும்

புரட்சிவித்து வீழ்ந்தபின்பே மாறுதல் நிகழ்ந்தனவே

நங்கையர் முதற்கூந்‌‌ தல்நறுக்கி சிலாகித்

திங்கு உலாவு இன்சூழல் இன்நான்மட்

டும்நசிந்து கீழ்நிலை தொழிலென உதறியே

போனவர்கள் இன்றுசிகை பல்விதமாய் பேர்அலங்கா

ரம்செய்யும் சீர்திருத்து நர்கள் மாகலைஞர்

ஒப்பாம் பாடிப்போற் றும்நிலையை வந்தடைய

இத்தனைநாள் ஆயின மயிர்புகழ் ஒருகாலும்

குன்றிடா பேர்வரலா றுசொல்வதை அறியாயோ

இத்துனை நெருக்கம் கொண்டதன் காரணம்தான்

உன்னிடம்  உரைக்கி றேன்ஒன்று கூர்ந்துகேள்

நம்கடை தெருவி லேஅடிக் கடிநுழையும்

வாகனக் குவியலில்செஞ் சாந்திற மகிழுந்து

காணாயோ வெங்கதிர்சூட் டின்சுருங் கியகுறு

சுனையென அழகுநெற்றி கொண்ட என்னவளை

சென்று கண்நிறை வியந்து பார்த்திரா

மானிடர்எல் லாம்சடப் பொருள்பிரி வினில்தஞ்

சம்புகுந் திடல்வேண்டும் பின்னலிட்டும் தப்பிய

மயிர்இழைகள் திராட்சை இன்கொடி அரும்பிய

பசுந்தளிர் இளங்கொடி படிய சீவிய

தலைபசும் பொன்தகடுமுன் மண்டையில் நிறந்திரி

மயிரழகில் செந்தலைக் குருவினமே தோற்றோடும்

பேரழகு சென்றபின் செம்பவளக் கல்சாறுபிழி

சாயம்எடுத் தாற்போல் மின்னும் பொன்னேர்

பேருவகை மூட்டியவள் என்ஆழ் உள்ளத்

தில்அழகு சாதனப் பொருட்கள்இன்றி

போயினும் இவள்எழிலுக் கெள்ளவும் குறைவில்

விண்மீன்து டைத்தெரிந்த நள்ளிரவில் வான்மின்

னிட்டொளிரும் வெண்மதி தான்அவள் ஒருசெல்

ஈரிதழ் இரண்டும்அண் டம்நிலைபே றுற்ற

நாள்முதல்தோன் றிஇம்மண் கண்டெடுத் தபொருள்

ஒன்றும்கிட் டாஅஅ  அதனுக்கு ஒப்பாக்க

இன்இதழி யைந்து உண்டாகும் கீச்சொலி

முகில்முட்டி ஈன்ற பேர்இடின் கோடியில்ஓர்

பங்கு பொன்னவள் நடையதுமென் புல்லிடை

வழியோ டும்தென் றல்கடைந்து கண்ட

நுண்வழி இதமாய்இ ருக்குமவள் பொன்நடை

நிலமகள் விரும்பிடுவாள் முன்பா தமக்குதிகால்

மாறிபட் டேஇருக்கும் பாணி சாய்வு

நாற்காலி முன்பின் ஊசலாட் டம்அவள்

நிழல்அழ கினைவருணித் திடவே பேர்கலைச்சொல்

ஆக்கிடுமாம் நீள்குறு எனநிலையில் லாவாகும்

கன்னங் கர்நிழல் குடித்தே வெஞ்சூரியன்

சூட்டினை தணிக்குமே அந்திபொ ழுதினில்

நன்னிலம் பரவிடும் அவள்நிழல் உருஈ.

காகிதம்மேல் வீழ்ந்தமை சட்டெனதன் கைகால்

நீட்டுவதாய் அமையும் அம்மைதழும் பென்கண்ணி

மைக்கீழ் பெற்றபுள்ளி ஆர்த்திடும் கடற்கரை

மணல்தொடங் கியஆதி புள்ளி தோற்பாவை

போல்நடஞ்செய் ஈர்விழி பதில்கேட்டி ருக்கையில்

மேல்கீழ்என் றேஅசைந்தா டும்உறி தெருவோரம்

காட்டிச் சென்றகண்ணிமைப் பொழுதினில் பரிபோ

னேன்எந் தன்மன மதிமுழு தினையும்

எய்தா அம்பென செயலின்றி ஆனேன்நல்

வாழ்வென இதுகாறும் வாழ்கிறேன் நானென்

றால்சவரக் கத்திபிடித் தினால் அன்றோ

மூண்டெழுந்த கன்னிகா தல்தனைஇங் கேஅவிழ்க்கி

றேன்அவ ளிடம்நீட்ட மாபெரும் பரிசுப்பொ

ருள்என்னி டம்இல்லை அந்தோ சொல்வதற்கு

கூசினேன் வாய்மொழிஇல் லாகாதல் செய்யும்

புண்ணியர் களுக்குசை கைமொழிமாற் றென்றே

கிட்டுவதாய் பொல்லா நாவிதன் எனக்கோர்

உள்ளத்தின் கண்மூண்டெழுந் தகாதற் வேட்கை

எடுத்தியம்பி பாரம்கு றைக்கும் நற்பணிசெய்

மாட்டாயோ மாமயிரே கட்டவிழ்க்கும் கூந்தல்

காவென விரிகையில் சற்றென விரைந்தோடி

உட்புகுக என்னவள்எண் ணவோட்டக் கேட்டு

வாராய் பூந்தளிர் அவளழகில் சொக்கி

தன்னிலை மறந்தே யான்கத்தி கொண்டேவா

டிக்கையா ளர்கன்னத் தில்வீழ்கீ றல்கழுத்தில்

படாமல் யான்நன் தொழில்புரிய காதலியே

நல்தீர்ப்பு சொல்லிடவேண் டும்என் மாமயிரே

ஆருயிர் இறுகிதவிக் கும்நோய்க் குறீஇ

உற்றுஉரை வாய்வாடும் மீளாத்து யர்குறித்தும்

நற்செய்தி கொண்டுவரும் இன்கணமே நாறும்

பூங்கொன்றை யும்வாங்கி வா.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு