யார் தான் பாவம் இல்லை -கோ.வெங்கடாசலம்
யார் தான் பாவம் இல்லை -கோ.வெங்கடாசலம்
ஒரு மனிதனின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய முக்கிய சமூக நிறுவனங்களாக கல்விக்கூடமும் குடும்பமும் இருக்கின்றன. இவற்றுக்கு இடையே உள்ள
பிணைப்பு பாதை கொண்டும் அதனை சார்ந்த ஒழுக்க
நெறிகளோடும் பயணித்தல் அவசியமாகும். இந்த கருத்துகளை பிரபஞ்சனின் மரி என்கிற
ஆட்டுக்குட்டியோடு பொருத்தலாம். .
மரி
என்கிற ஆட்டுக்குட்டி கதையில் தமிழாசிரியருடன் உரையாடும் தலைமை ஆசிரியர் தனது பணி அனுபவம்
40ஆண்டு காலம் என குறிப்பதோடு தன் காலத்தில் 18 வயதான பெண்கள் குழந்தை பெறும்
குடும்ப சூழ்நிலையை நினைவு கூறுவதோடு, மரியையும்அவ்வாறு வயதை வைத்து
விமர்சனம் செய்கிறார். இதில் அவருக்கும் இன்றைய தலைமுறைக்கும்
இடையேயுள்ள இடைவெளியை புரிந்து கொள்ள வேண்டும். அவர் தன் இளம்வயதில் சந்தித்த
சமூக அனுபவத்தைக் கொண்டு மரியை அணுகுவதன் விளைவாக மரியின் மீது கோபம் கொள்கிறார். ஒழுக்க விதிகளுக்கு அவள் அப்பாற்பட்டவளாகவும் அவள் தெரிகிறாள்..
கிறிஸ்துவ சமயத்தில் ஆடு என்ற சொல் அவர்களின் புனித
நூலான விவிலியத்தின் பல்வேறு அறங்களோடு இணைத்து பேசப்படுகிறது. ஓரிடத்தில் வழி தவறிச் சென்ற ஆட்டுக்குட்டியை இயேசு தன்
தோள் மீது போட்டுக் கொண்டு வந்தார் என்கிறது விவிலியம். இதனோடு தொடர்புடைய மற்றொரு சொல் நல்ல மேய்ப்பன் என்பதாகும். ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பன்
தவறவிட்ட ஆட்டுக்குட்டியை மீட்டு வருவதை இக்கதையில் வரும் தமிழாசிரியரோடு பொருத்திப்
பார்க்க முடிகிறது.
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள உறவு என்பது
பல சிக்கல்களை உள்ளடக்கியது. மாணவர்களின் மனம் என்பது
குழந்தை வயப்பட்டதாகும். ஆசிரியரின் மனம் என்பது பக்குவபட்ட நிலையில் இருந்து
குழந்தைகளை அணுகுவதாகும். இவற்றுக்கிடையே நேர்மறையான
போக்கு இருப்பின் மாணவர்களின் முன்னேற்றம் என்பது அடுத்தடுத்த படிநிலைகளை அடையும். இக்கதையில் வரும் தமிழாசிரியர் தனது மனநிலையிலிருந்து
சிந்திக்காமல் எதிர் நிலையில் அதாவது, குழந்தைகளின் மன நிலையில் இருப்பதோடு, மூன்றாவது மனிதர் மனநிலையிலிருந்தும்
சிந்திப்பதால் தான் மரியை புரிந்து கொண்டு அவளின் வாழ்வின் மீது புதியதொரு
மாற்றத்தை வித்திட முயற்சி செய்கிறார்.
‘ஏதாச்சும் மெடிக்கல்
சர்டிபிகேட் கேட்டு வாங்கி சேர்த்துக்கலாம்னா,
வந்தால்ல தேவலாம்.
‘நம்ம டி.இ.ஓ மாதிரில ஸ்கூலுக்கு
இஷ்டப்பட்டால் வருகிறாள்’
‘சே….சே…சே…. என் வாயால அதை எப்படி சொல்றது? ஒரு பிரெஞ்சு சைக்கிள்ளே கண்ணு குட்டி மேல உக்காந்துட்டு வர்ற மாதிரி பாண்ட் போட்டுக்கொண்டு வந்தாள். பாண்டுங் கானும் ….பாண்ட்! என்ன மாதிரி பாண்டுங்கிறீர்? அப்படியே “சிர்” குன்னு பிடிச்சுக்கிட்டு போட்டோவுக்கு சட்டம் போடுற மாதிரி, அதாவது அப்படி என்று தெரியிற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்தாள்.’
மேற்கண்ட உரையாடல்கள் தமிழாசிரியருக்கும்
தலைமையாசிரியருக்கும் இடையில் நிகழ்வது ஆகும். தலைமையாசிரியர் பாத்திரம் வழி வெளிப்படும்
கருத்துக்கள் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி உள்ளதாக காட்டப்படுகிறது. தலைமையாசிரியருக்கு 40ஆண்டு கால பணி அனுபவம் உள்ளது. அதனை தமிழாசிரியரின் வயதோடு பேச விளையும்
தலைமையாசிரியர் 18வயது என்பது பெண்களுக்கு இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் காலமென
தன் பேச்சில் வெளியிடுகிறார். இன்றைய 18வயது பெண்கள் பள்ளிக்கூடம்
செல்கின்றனர். ஆனால் அப்போதெல்லாம் கையில் ஒன்றும் இடுப்பில்
ஒன்றும் குழந்தைகள் இருக்கும் என்று சுட்டுகிறார். தன் இளம் வயதில் தான் வாழ்ந்த சூழ்நிலையை இன்றைய
தலைமுறையிடம் ஒப்பிடுவதால் மாணவருக்கும்(மரிக்கும்) தலைமையாசிரியருக்கும்
இருக்கும் உறவு என்பது எதிர்மறையானதாக மாறிவிடுகிறது.
இந்திய சமூகத்தில் குடும்பத்தின் முக்கியத்துவம்
என்பது குழந்தைகளின் வளர்ச்சியையும் அதனைச் சுற்றியுள்ள மேம்பாட்டையும்
நேர்க்கோட்டில் கொண்டு செல்வதாகும். இந்நிலை சில பல இடங்களில்
தவறவும் கூடும். இதுதான் மரிக்கு நிகழ்ந்ததாக பதிவு செய்யப்படுகிறது. மரிக்கு சிறுவயதிலேயே குடும்பம் என்ற கட்டமைப்பு
தகர்ந்துவிடுகிறது. கணவனால் கைவிடப்பட்ட மரியின்
தாய் மற்றொரு ஆணோடு திருமண பந்தத்தில் இணைகிறார். ஏனோ? அந்த ஆணிடமிருந்து தந்தை என்ற பாசப்பிணைப்பினை
மரியால் பெற இயலவில்லை. இதன் விளைவு தாய், தந்தை என்ற பிடிப்பு இல்லாத
வாழ்க்கை மரிக்கு உருவாகிறது. தன்னைச் சுற்றியுள்ள சுற்றத்தாருடனும்
குடும்பத்தாருடனும் ஏற்படும் பாசப்பிணைப்பும் ஒட்டுறவும் குழந்தையின்
ஆரோக்கிய மனநிலையை உருவாக்கும். அதோடு தன்மீது பலர் அன்பு
செலுத்த உள்ளனர் என்ற நிலை வெளிப்படும் பொழுது குழந்தைகளின் மனவிரக்தி
தவிர்க்கப்பட்டு, அனைத்து செயல்களின் மீதும்
பிடித்தமேற்பட்டு சிறப்பானதொரு முன்னேற்றம் அடையவும் இயலும். இவை யாவும் மரிக்கு கிடைக்கப்பெறாததற்கு
காரணம் அவரின் குடும்பம் இளம்பருவத்திலே
சிதைந்ததே ஆகும்.
ஒரு குழந்தையைச் சுற்றியுள்ள
ஒப்பார் குழு, குடும்பம், கல்விக்கூடம் என்னும் யாவும்
குழந்தை மனநிலையோடு நெருங்கி பங்காற்றுபவையாகும்.
மேற்கூறிய
மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது நேர்மறையான ஊக்கத்தினையும் ஆக்கத்தினையும் அளிக்கும்போது குழந்தையின் நடத்தைச்சார்
உளவியல் சிறப்பானதொரு மனவெளிப்பாட்டினை அளிக்கக்கூடும்.
ஊக்கப்படுத்துதல், பரிசளித்தல், பாராட்டுதல், அரவணைத்தல் என்னும் வெளிப்பாடுகள்
குழந்தைக்கு கிட்டும்பொழுதே அக்குழந்தையின் நடத்தை செயல்பாடுகளும் இயல்பானதாக
அமையும். மேற்கண்டவை எவையும் மரிக்கு கிட்டாதபொழுது அவளின் நடத்தைச்சார்
செயல்பாடுகள் மற்றவர்களின் பார்வையில் திமிரு பிடித்தவளாகவும்
அலட்சியமிக்கவளாகவும் ஒருவித பிம்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. உளவியல் பார்வையில் பெண் குழந்தை தந்தை மீதும் ஆண்
குழந்தை தாயின் மீதும் அதிகப்பற்றும் பாசமும் வைத்திருக்கும். ஆனால் மரிக்கு
தந்தையிடமிருந்து எவ்வித அன்பு கிடைக்கப்பெறா சூழல் தாயிடம் அந்த அன்பு
மடைமாற்றம் செய்யப்பட்டிருப்பின் மாறி இயல்பானவளாக இருந்திருப்பாள். துரதிஷ்டவசமாக அவளுக்கு
அதுவும் வாய்க்கப் பெறவில்லை. இதன் மொத்த வெளிப்பாடு தான்
வரலாற்று ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது மரி பயன்படுத்திய சொல்லாடல்கள். தமிழாசிரியர் மரியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது
நடத்த பெரும் உரையாடலானது அவளின் உளச்சிக்கல் மற்றும் மனப்போராட்டத்தை வெளிக்
கொணர்வதாக அமைகிறது.
மரியின் மீது யாரும் அன்பு காட்டியதில்லை. அவ்வாறு அன்பு காட்ட முயலும்
தமிழாசிரியர் மற்றும் அவரின் மனைவி மீது மரிக்கு இயற்கையாகவே பிடித்தம் ஏற்படுகிறது. இதன் விளைவு கதையின் அடுத்தகட்ட
காட்சிகளாக நகர்கிறது. கதையின் முடிவை நோக்கி செல்லும்
பகுதிகள் உளவியல் சார்ந்தவையாகவே இருக்கின்றன. கடற்கரைக்கு புறப்பட்ட
தமிழாசிரியர் தன் மனைவியோடு சென்று மரியை வீட்டில் சந்திக்கிறார். அந்த வீட்டின் அமைப்பே மரியின்
வாழ்க்கையை சித்தரிப்பதாக உள்ளது. கலைந்து கிடக்கும் பொருள்களின்
நடுவே கண்விழித்த மரி தமிழாசிரியரை சந்திக்க வருகிறாள். அதனைத் தொடர்ந்த பகுதிகளில் மரியின்
தனிமையான வாழ்நிலையையும் அவள் மறைக்கும் தாயுடனான தாமரை இலை போன்ற உறவையும் சுட்டி காட்டுகிறார்.
விவிலியத்தில்
இடம்பெற்றிருக்கும் நிகழ்வு ஒன்று இக்கதையினை வாசிக்கும் போது என் நினைவுக்கு
வந்தது. விலை மகளிர் ஒருத்தியை ஊரார் கல்லெறிந்து கொள்ள
முற்பட்டனர். அந்தப் பெண் இயேசுவிடம் தஞ்சம்
போகிறாள். இயேசு வந்தவர்களை நோக்கி “உங்களில் யார் பாவம் செய்யாமல்
இருக்கிறீர்களோ அவர்கள் கல்லை எறியுங்கள்” என்றவுடன் அனைவரும் கற்களை கீழே
போட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். இதேபோன்று இக்கதையில்,
“ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு
உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடுறீங்க?”
சிரிப்புதான் வந்தது.
“பைத்தியமே உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க
யாராலுமே கெட முடியாது, தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப்போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை. உங்க அம்மாவும் அப்பாவும்
யாருமே கெட்டவங்க இல்லே.”
இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று
பொருந்துவதாக அமைகின்றது. இவ்விரு நிகழ்வுகளில்
வெளிப்படும் உண்மை என்பது மனிதனின் எதார்த்தப் படைப்பை தெரியப்படுத்துவதாக
உள்ளது.
அம்மாவை பழிவாங்கவே தான் விட்டேத்தியாக இருப்பதாக
கூறும் மாதிரி அன்பு வைக்கப்பட்ட நிலையில்
“என்ன நீங்க கேட்டிருக்கணும்
சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலன்னு என்னை அறைஞ்சு கேட்டுகணும் சார். அப்படி யாரும் என்னை கேட்க
இல்லேங்கிறதுனால தானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி யாரும் அன்பு செலுத்தினது இல்லேசார்.” இன்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கூறுகிறாள். தாய் என்ற மனப்பான்மையுடன் அவர் சமைக்கவும் இல்லை, நான் அவளுக்கு மகள் என்ற மனநிலையில் சாப்பிடவும்
முடியவில்லை. எனக் கூறும் மரிக்கு சுமதியின் அன்பு அதற்கு மாற்று மருந்தாக அமைகிறது.
குடும்பம் என்ற அமைப்பு குழந்தைகள் மனதில் அடிப்படையைக்
கட்டமைக்கிறது. அதன் மீது விதைத் தூவும் பணியினை கல்விக்கூடங்களும் அதில்
பணியாற்றும் ஆசிரியர்களும் மேற்கொள்கின்றனர்.
இவற்றின்
வெளிப்பாடுகளே குழந்தையின் சீரான மனநிலையை
உருவாக்குகின்றன. எந்திரமயமான இன்றைய சூழ்நிலை
என்பது குடும்பம் மற்றும் கல்விக்கூடங்களை எதிர்மறை போக்குகள் நோக்கி பலவந்தமாக தள்ளுகின்றன. இக்கதை வெளிவந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய
சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தி போகிறதை நம்மால் காண முடிகிறது.
Comments
Post a Comment