இராகுலன் கவிதைகள்

 இரா. இராகுலன் கவிதைகள் 


இப்பொழுது இப்படித்தான் இருக்கும்

இந்தப் பகல் கடக்கட்டும் சிலமணி நேரம் தூங்கி எழலாம்

குளியலறையில் சுடுநீரில்

நீண்ட நேரம் குளித்துவரலாம்


கிளையில் காத்திருக்கும் பறவையின் 


தவிப்பைக் கவனித்துக்கொண்டிருக்கலாம் 


ஆடு கடித்துவிட்டுப்போன கொடிக்கு நீரூற்றலாம் 


இந்த இரவு கடக்கட்டும் 


குரைக்கும் நாயின் மொழியைக் கவனிக்கலாம்


பத்து மணிக்கு முன்னதாகவே தூங்கலாம்


அல்லது 


விடியற்காலைவரை விழித்திருக்கலாம் 


இரவும் பகலும் இன்னும் சிலநாட்களும்
இப்படியே கடந்துபோகட்டும் 


எல்லாம் சரி ஆகிவிடும்

*******

ஓ நண்பா எங்கிருக்கிறாய்

போகும் வழியும்

எங்கு இறங்கி எந்தப் பேருந்தில் 

தொடர்வண்டியில் ஏற வேண்டும்

ஒருவரிடம் எப்படிப் பேசுவது

கூர்ந்து கவனித்து எடையிடுவது

கேள்வி எழுப்புவது 

பதிலளிப்பது 


என் நன்மைக்குப் பொய் பேசுவது 

முகத்திற்கு நேரே முகங்கடுப்பது

மிகத் தீர்க்கமாய் மறுக்க ஏற்கச் செய்வது

எதிரிலிருப்பவனின் நெஞ்சைப் பிளப்பது

தெரியவில்லை


மனிதர்களையும் 

வாழ்க்கையையும் நினைத்து 

நிறைய பயமாக இருக்கிறது

உடன் யாரும் இல்லாததாக உணர்கிறேன்

எனக்கு முன்பாக நின்று சண்டையிடு


நிறைய மறந்துவிடுகிறேன் உன்னையும்

நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டு்ம் 

எதை விட்டுவிட்டு எதை எடுத்து வரவேண்டும் எங்குப் போக வேண்டும்


எங்கிருந்தாலும் வந்தென் முன் நடந்துசெல்

வழி தெரியாமல் திரிந்துகொண்டிருக்கிறேன்

நினைவுகள் இடையறுந்து

*******

என் மௌனம் கலைப்பவர்கள் 

செவிடாகிக் கடவதாக 

என்னைச் சந்தேகிப்பவர்களின் கண்களை 

மரங்கொத்தி கொத்த கடவதாக

என்னை எடையிட்டுப் பார்ப்பவர்கள் 

நோய்பட்டுக் கிடக்கக் கடவாதக 

என்னை இடறிவிழ நினைப்பவர்கள் 

முடக்குவாதம் பெறுவதாக 

என்னைச் சொற்களால் துளையிடுபவர்கள் 

ஞானமற்றுப் போவதாக 

என்னை மறைவாக நின்று பார்ப்பவர்களின் 

தலைமேல் மலைகள் சரிவதாகுக 

என்னை அழவைப்பவர்களின் 

இளமை குன்றுவதாக 

இதற்குமேலும் நின்பாதைகள் மறந்து 

நின்ற இடம் நின்று கிடந்து

எனக்காகக் காத்திருக்கக் கடவதாக 

*******

யாரையோ குறிப்பிடுகிறேன்

என்னைத்தான் 


எதையோ பேசுகிறேன்

இதைத்தான்


எங்கோ பார்க்கிறேன்

இங்குதான்‌


இல்லையென்கிறேன்

ஆமாம்


இப்படியில்லையென்கிறேன்

இப்படித்தான் என 

வரிந்து கட்டிக்கொண்டு


நெருங்கிவிடுகிறீர்கள்

அல்லது 

விலகிவிடுகிறீர்கள்

*******

15 லிருந்து 30 கி.மீ கடந்து இறங்குகிறேன்
இறங்க வேண்டிய இடம் தாண்டி 

கடைவீதி சென்று வெறுமனே வீடு திரும்புகிறேன்
வாங்கிவரச் சென்றதை மறந்து

45 நொடிகளுக்கு மேல் எவரேனும் பேசுவதை 
கூர்ந்து கவனிக்க முடியாது கவனிப்பதாய் 
சந்தேகமின்றி பாவனை செய்கிறேன்

7
8 முறைக்கு மேல்
இரகசிய குறியீட்டை மறந்துள்ளேன்
ஏடிஎம் இயந்திரத்தில் பணம்‌ எடுத்தபின் அட்டையை அதிலேயே விட்டுவிடுகிறேன்

நன்கு தெரிந்தவர் அழைக்கிறார்
சேமித்து வைத்த பெயரோடு வருகிறது
யாரெனச் சில நொடிகள் குழம்பித் தவிக்கிறேன்

குளிக்கச் செல்கையில் அறை நண்பர் உள்ளிருப்பதை மறந்து 
தாழிட்டுச் சென்றுள்ளேன்

ஏதேனும் விவரமறிய தகவல் கேட்கிறேன்
தந்த பதிலை மறந்து மீண்டும்
அதே கேள்வியைக் கேட்கிறேன்

எங்கிருக்கிறேனென அருகிலிருப்பவரை 
விசாரித்துக்கொள்கிறேன்

என் பெயர் சொல்லி அழைக்கின்றனர்
யாரையோ அழைக்கின்றனர் என்றிருக்கிறேன்

அடிக்கடி உடலை மறந்து
உடலெங்கும் சிறகுகள் முளைத்து 
கிளையமரா பறவையாகி 
வெளி முழுதும் பறக்கிறேன்

*********


Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு