உளமொழியெனில்

 உளமொழியெனில்

-அழகுராஜ்


      “மொழிபெயர்ப்பு என்பது மாற்றுருவாக்கமே அன்றி வேறில்லை. அதாவது. (கருத்தியல் ரீதியில்) ஒரு மொழிக்கு மாற்றாக இன்னொன்றை வைப்பதாகும். இதனால், துல்லியமான மொழிபெயர்ப்புச் சாத்தியப்படாததாகிறது. காரணம், இதில் மொழி விளையாடுகின்றது.” எனும் ழாக் டெரிடாவின் கருத்தையொட்டி வளரும் “உளமொழி பெயர்ப்பியலும் மொழிபெயர்ப்பு உளமும்” என்கிற மணல்வீடு 48வது இதழில் வெளியான தி.கு.இரவிச்சந்திரனின் கட்டுரை இந்த நூற்றாண்டை “மொழிபெயர்ப்பு நூற்றாண்டு” எனக் கூறி மொழிபெயர்ப்பு குறித்த தனது மாறுபட்ட பார்வையை ஆழமான கருத்தமைவுடன் வெளிப்படுத்துகிறது. மொழியை சிக்மண்ட் ப்ராய்டு மற்றும் ழாக் லக்கான் ஆகியோரது உளப் பகுப்பாய்வியல் கூற்றுகளின் வழியே முன்வைப்பதன் மூலம் இக்கட்டுரை தனிக்கவனத்தை ஏற்படுத்துகிறது. 


      உளப்பகுப்பாய்வியல் வழியாக மொழிபெயர்ப்பை அணுகும் இந்தக் கட்டுரையில் டெரிடாவின் “மொழிபெயர்ப்பு என்பது மாற்றுருவாக்கமே அன்றி வேறில்லை. அதாவது. (கருத்தியல் ரீதியில்) ஒரு மொழிக்கு மாற்றாக இன்னொன்றை வைப்பதாகும்.” என்ற வரி முழுமையாக ஏற்கப்படுகிறது. “இதனால், துல்லியமான மொழிபெயர்ப்புச் சாத்தியப்படாததாகிறது.” என்கிற வரியை நிறுவுவதில் கட்டுரை மயங்கி ‘டிட்டோ கலை’யாக இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு இருக்கிறது என்கிறது. “காரணம், இதில் மொழி விளையாடுகின்றது.” என்கிற வரியை குறிப்பான்களைக் கொண்டு கட்டுரை நிரப்புகிறது. டெரிடாவின் பின் நவீனத்துவத்திலிருந்து ப்ராய்டு வழியாக லக்கானின் உளப் பகுப்பாய்வியலுக்குள் சென்று நிற்கக்கூடிய அணுகுமுறையில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரையில் மொழிபெயர்ப்பு கலையா? அறிவியலா? என்பது வெளிப்படையாக முன்வைக்கப்படவில்லை.  டெரிடாவின் கருத்தில் அடைப்புக் குறிக்குள் ‘கருத்தியல் ரீதியில்’ என்ற சொல் வருகிறது. எண்ணங்களை மொழிவயப்படுத்துவதை மொழிபெயர்ப்பு என்கிறார் தி.கு.ர. எண்ணம் என்பது மொழியற்ற சிந்தை, கருத்து என்பது மொழியும் எண்ணமும் கலந்த நிலை என்ற விளக்கத்தின் படி தி.கு.ர.வின் கருத்தைக் கலையென்றும், கருத்துகள் மொழிவழியாக சிந்திக்கப்படுகிறது என்கிற விளக்கத்தின் படி டெரிடாவின் கருத்தை அறிவியல் என்றும் கொள்ளமுடியும். டெரிடாவின் கருத்தை முழுமையான அறிவியலாக சுட்டவும் முடியாது. மாற்றுருவாக்கம் என்ற சொல்லில் வரும் ஆக்கம் என்பது மொழிப்புலத்தில் கலையென்றே அர்த்தங்கொள்ளப்படுவதால் அறிவியல் என்ற வகைமைக்குள்ளும் டெரிடாவின் கருத்தை அடக்க முடியாது. வேண்டுமானால் போலி அறிவியல் (Pseudo Science) என கார்ல் பாப்பருடைய “ஜோதிடம் மற்றும் மனப் பகுப்பாய்வு போலி அறிவியலின் எடுத்துக்காட்டுகளாகும்” என்கிற கூற்றின் அடியொற்றி கூறலாம். கட்டுரையும் மனத்தைப் பகுப்பாய்வு செய்தே மொழிக்கு விளக்கமளிக்கிறது. “மொழிகளின் விளையாட்டு” என்ற குறிப்பு டெரிடா ஆழங்கால்பட்ட பின்நவீனத்துவ நோக்கில் இருந்து சொல்லப்படுகிறது. இப்படி மூன்று பரிமாணங்களை ஒருங்கே வைத்துள்ள கருத்தின் வழியே கட்டுரையைத் தொடங்குவது இக்கட்டுரையின் சிறப்புகளில் ஒன்று.


      இந்த கட்டுரையில் எந்தவொரு மொழிபெயர்ப்பின் வகைமையும் நேரடிச்சொற்களால் விளக்கமாக சொல்லப்படாமல் கலைச் சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்கேத மொழி, குறியீட்டு மொழி, நாட்டார் மொழி, சிந்தனை மொழி, தன்மொழி, சமூக மொழி, குறிப்பான், குறிப்பான் சங்கிலி, ஒருங்கு குறி ஆகியன அதற்கு எடுத்துக்காட்டாகும்.துறை சார்ந்த மொழியை ஆங்கிலத்தில் “லைப்ரரி லாங்வேஜ்” நூலக மொழி எனச் சொல்வார்கள். இப்படியான கலைச்சொற்கள் மொழி புழங்கும் தளத்தில் அதிகமுண்டு. மேலும் மொழிபெயர்ப்பு வரலாறு, தொல்காப்பியர் கூறும் மொழிபெயர்ப்பின் வகைகள், மூல மொழி, இலக்கு மொழி, மொழிபெயர்ப்பாளரின் புலமை மற்றும் தகுதி முதலான கட்டுரையில் இடம்பெறும் பொதுவான பல செய்திகளை நான் இக்கட்டுரையில் தொடவில்லை. புதுமையான கருத்துக்களோடு கட்டுரையை அணுகுவதில் சிரமமுள்ள பகுதிகளை எளிமையாகக் கொண்டு போய் சேர்ப்பதையும் கருத்தில்கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது. புரிதலுக்காக மொழிபெயர்ப்பு சார்ந்த பழைய கருத்துகள் சிலவற்றைத் தொட்டுள்ளேன். 


      ஐந்தறிவு உயிர்கள் சங்கேத மொழியைப் பயன்படுத்துவதையும் அதிலிருந்து வேறுபட்ட மனிதன் குறியீட்டு மொழியைப் பயன்படுத்துவதையும் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுவதன் வாயிலாக நேரடியாக உளம் சார்ந்த இயக்கம் குறியியல் நோக்கில் விளக்கப்படுகிறது. சங்கேதம் என்ற மறைகுறிக்குள் இருப்பில் தொடங்கி அசைவுகள், ஒலிகள், பிறவற்றை உணர்த்தும் செய்கைகள் என அனைத்தும் தனித்தனி அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால், மனிதன் பயன்படுத்தும் குறியீட்டு மொழி இடம், காலம், சூழலுக்கு ஏற்ப திட்டவட்டமாக தனித்தனி அர்த்தங்கொள்வன.  கட்டுரையில் சிவப்பு என்கிற நிறம் குறியீட்டு மொழிக்கான சான்றாகக் கொள்ளப்படுகிறது. “குறி என்பது ஒரு பௌதீக வடிவமும் அதனுடன் இணைந்த ஒரு மனக்கருத்தும் கொண்டது” என்கிறார் சசூர். சிவப்பு என்பதை பௌதீகக் குறியாகக் கொண்டு இடம், காலம், சூழலுக்கு ஏற்ப இருக்கின்ற மனக்கருத்தின் வழி பொருள்கொள்வதை குறியீட்டு மொழி எனக் கொள்ளலாம். “அர்த்தம் என்பது குறியீடு போன்று புறச்சார்புடையது. சொல்லின் அகத்தில் அர்த்தமில்லை.” என்கிற குறியீட்டு மொழி குறித்த விளக்கத்திற்கு “பௌதீகம்” என்ற புறவயப்பட்ட சொல்லைக் கொண்டு நாம் அர்த்தங்கொள்ள வேண்டியுள்ளது. குறி என்ற சொல்லுக்குள் குறிப்பான் எனப்படும் குறியின் புற அமைப்பும், குறிப்பீடு எனப்படும் குறியின் மிகைக்கருத்தும் ஒருங்கே இருக்கிறது. இவ்விரண்டையும் பாகுபடுத்திப் பொருள் கொள்வதாலேயே மனிதமொழி பன்முகத் தன்மை கொண்டதோடு செயற்கை மொழியாகவும் இருக்கிறது. இங்கு செயற்கை என்பது யோசித்து செயல்படும் அறிவைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதன் சிந்திக்கத் தொடங்கியதிலிருந்தே புதிய புதிய கண்டுபிடிப்புகள் தோன்றலாயின. இயற்கை மாறுதலுக்கு உள்ளாயிற்று. மொழி என்கிற இயற்கைப் பயன்பாடு சிந்தனை என்ற செயல்பாட்டின் வழி செயற்கைத் தன்மையை தன்னுள் ஏற்கிறது. அந்த செயற்கைத் தன்மையின் வெளிப்பாடாக மொழியில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றங்கள் உயர்ச்சியைக் குறிப்பதால் மனிதன் உயர்திணை எனப்படுகிறான் என்கிற சொல் விளக்கம் கட்டுரையில் இடம்பெறுகிறது. மேலும், ஏன் மொழியும் மொழிபெயர்ப்பும் குறிப்பான்களின் விளையாட்டு எனப்படுகிறது என்பதை பொருள் கொள்ளும் தன்மையைக் கொண்டு விளக்குவது டெரிடாவின் கருத்துக்கு வலுசேர்க்கும் பகுதியாகும். 


      இந்த கட்டுரையில் வரும் மொழிபெயர்ப்பு சார்ந்த செய்திகளை மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, மொழியாக்கம், தழுவல் என்ற நான்கு நிலைகளில் அமைத்துப் பார்ப்பது புரிதலை எளிமைப்படுத்தும். மொழிபெயர்ப்பில் மொழிகள் மாற்றப்படுவதில்லை. ஒரு மொழியில் உள்ள கருத்துகள் மற்றொரு மொழிக்கு மாற்றப்படுகிறது. கருத்து என்ற சொல்லுக்கு தொல்காப்பியர் வழிநின்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. 

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு  மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”

 (தொல்.நூ.எ.1516)

 ஆறறிவுக்கு சொல்லப்படும் மனன் மனிதனுக்கு உரியது. இந்த மனன் மனத்தின் வயப்பட்டதாகும். மனத்தில் தான் எண்ணம் உதிக்கிறது. எண்ணமானது எல்லா உயிரினங்களுக்கும் உரிய உள்மன நனவிலி செயல்பாடு. மனிதன் மட்டும் பிற உயிர்களிடமிருந்து வேறுபட்டு எண்ணங்களை மொழிவயப்படுத்தி வெளிக் கொணர்கிறான். எண்ணங்கள் மொழிவயப்படும் போது கருத்துக்களாக வெளிவருகிறது. எண்ணங்களை கருத்தாக பெயர்ப்பது உளமொழி பெயர்ப்பு எனப்படுகிறது. எண்ணங்கள் மொழியாகும் போது மொழிபெயர்ப்பு கலையாகவும், கருத்துகள் மொழியாகும் போது மொழிபெயர்ப்பு அறிவியலாகவும் அமைகிறது எனலாம்‌. “மொழி என்பது மேலோட்டமான பொருளில் எழுத்து வடிவிலான மொழியையும், விரிவான ஆழமான பொருளில் ஒரு கருத்தை வெளிப்படுத்தும் அனைத்து வகைச் சாதனங்களையும் செயல்களையும் அர்த்தப்படுத்தும்.” என்கிற இராசேந்திரசோழனின் கருத்திலுள்ள ஆழமான அர்த்தப்பாட்டை மனம் சார்ந்து விளக்குவதாகவே “உளமொழி பெயர்ப்பியலும் மொழிபெயர்ப்பு உள்ளமும்” என்கிற கட்டுரை அமைகிறது.


     மொழியைப் பெயர்க்கமுடியாத பட்சத்தில் ஒலிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் நிகழ்கிறது. மாற்றொலி பெயர்ப்பு என்பது கருத்துகளுக்கு நிகழ்வதில்லை. புதிய கண்டுபிடிப்புகளுக்கான பெயர் சூட்டுதலில் தான் ஒலி பெயர்ப்பு நிகழ்கிறது. Bus, Computer என்பதை பஸ், கம்ப்யூட்டர் எனப் பயன்படுத்துவதை ஒலிபெயர்ப்பு எனலாம். ஒலிபெயர்ப்புக்கு மற்றொரு வித்தியாசமான எடுத்துக்காட்டாக இலக்கியம் என்ற சொல்லைக் கூறுதல் தகும். இலக்கியத்திற்கு பலவாறாக பொருள் கூறப்பட்டாலும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை ஆகிய இருவரும் Literature என்ற சொல்லுக்கு பொருத்தம் கருதியே பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கியம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதைக் கருதலாம். பஸ் என்பதை பேருந்து என்று சொல்வதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் இருப்பது போல லிட்டரேச்சர் என்பதை இலக்கியம் என ஏற்றுக்கொள்ள ஒருமித்த காரணம் இல்லை. ஆகவே இதனை ஒரு வித்தியாசமான ஒலிபெயர்ப்பாகவே கருத வேண்டியுள்ளது. பஸ் பேருந்து என்றானது மொழிபெயர்ப்பு அல்ல மொழியாக்கம் ஆகும். “கிரேக்க, லத்தீன சொற்களைத் தத்துவமும் அறிவியலும் ஆங்கிலத்தில் எடுத்தாளும் பேது அவற்றின் ஒலி அமைப்பை அப்படியே பயன்படுத்துவதைக் காணலாம்.” என்பது ஆங்கிலத்தில் அதிகம் ஒலிபெயர்ப்பே இருக்கிறது என்பதற்கு சான்றாகும். ஜப்பானிய மொழிக்கு நெடுங்காலமாக எழுத்து வடிவம் இல்லை. சீன எழுத்துக்களை தனது மொழியின் ஒலிக்கு ஜப்பானிய மொழி பயன்படுத்தியுள்ளது. இது எழுத்து வடிவம் ஒலிக்கு பயன்படுத்தப்படுவதற்குரிய சான்றாகும். இலக்கியம் என்பதற்கு எழுதப்படுவது என்ற ஒரு விவரணை உண்டு. அதன்படி புனைவுகளுக்கு கற்பனை இலக்கியம் என்ற பெயர் சூட்டப்படுகிறது. எழுதப்படாது பேசப்படும் மொழி இலக்கியம் எனப்படாது. ஆனால் மனித மனத்துக்குள் இயங்குவது இலக்கிய மொழியல்ல, பேச்சு மொழியே. பேச்சுமொழி இந்தக் கட்டுரையில் நாட்டார் மொழி என குறிக்கப்பட்டுள்ளது. பேச்சு மொழியின் மூலமாகவே மனிதன் சமூகமாக கட்டமைக்கப்பட்டுள்ளான் என்பதை “மொழியின்றி அமையாது (சமூக) உலகு” என்று கட்டுரை குறிப்பிடுகிறது. 

“மொழி இல்லையேல் சமூகம் இல்லை. சமூகநிலையில் மொழி இல்லை. சமூகம் நிலவுகிறது என்று சொன்னாலே அங்கு ஏதோ ஒரு மொழி நிலவுகிறது என்று பொருள். அதேபோல ஒரு மொழி நிலவுகிறது என்றாலே அங்கு ஏதோ ஒரு சமூகம் நிலவுகிறது என்றும் பொருள்.” என இராசேந்திரசோழன் சொல்கிறார். ஆக மொழியும் சமூகமும் பிணைந்திருக்கிறது. சமூகத்தால் மொழி கட்டமைப்பு செய்யப்படுகிறது என்ற முடிவுக்கு இவ்விரு கருத்துகள் வழியே வரலாம்.


“படைப்பு மொழி சதா இரு குணங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உணர்வையும் கருத்தையும் மிகத் துல்லியமாகச் சொல்வதைப் படைப்பு மொழி சவாலாகக் கொள்கிறது.” என்கிறார் சுந்தரராமசாமி. இக்கூற்றில் வரும் படைப்பு மொழி என்பதை இலக்கிய மொழியாகக் கொள்ளலாம். மனத்தில் கருத்து பிறக்கிறது. கருத்தினைக் கையாள்வதில் இலக்கிய மொழிக்கு சவால் இருக்கிறது என சுந்தரராமசாமி கூறுவதையொட்டி வரும் தி.கு.ர மனித மனத்துள் இயங்குவது இலக்கிய மொழியே அல்ல என்ற முடிவையும் கொடுக்கிறார். சவாலுக்கான முடிவை நிறுவுவதாக இக்கருத்தை எடுத்துக் கொள்ளலாம். இதே கருத்தை உயிரினங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் மொழியினால் பெறும் சிறப்புகளை அறிய முடியும். கூட்டமாக இயங்கும் உயிரினங்களைக் குழு என்றும் மனிதனை மட்டும் சமூகம் என்றும் பெயரிட்டு அழைக்கிறோம். இது உயர்திணை, அஃறிணை வேறுபாட்டு வகைப்பட்டது. உயர்திணை, அஃறிணை சொற்பிரிவு சமற்கிருதம் முதலான மொழிகளில் இல்லை ஆனால் தமிழில் உண்டு. இதன் மூலம் மொழி சமூகத்துடன் பிணைக்கப்பட்டதன் விளைவாக பண்பாட்டுருவாக்கம் நிகழ்கிறது. பண்பாடு மொழியை உருவாக்குகிறது என்றும் முடிவுக்கு வரலாம். “சமூக இயல்பிலான மனித மனம் ஒரு ‘மொழிமனம்’ ஆகும். என்பதால் சமூகத்தில் இயங்கும் மனிதனின் மொழிமனம் பண்பாட்டுடன் இணைந்து சொற்களை உருவாக்குகிறது. சமூகத்தை ப்ராய்டு “உள்ளத்தின் தயாரிப்பு” என்கிறார். அதிலிருந்து நகர்ந்த லக்கான் சமூகத்தை “மொழியின் தயாரிப்பு” என்கிறார். மொழிக்குப் பிறகே சமூகம் அல்லது மொழியினால் ஆனதே சமூகம் என்பது கட்டுரையில் வெளிப்படும் கருத்து. சமூகம் என்பது பல்வேறு விதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மொழியோ தன்னியல்பாகவே ஒழுங்குமுறைகளைக் கொண்டிருக்கிறது. ஆதலால், சமூகம் மொழியால் உருவாக்கப்பட்டிருக்கும் போது ஒழுங்குமுறை விதிகளையும் கட்டமைப்புகளையும் கொண்டிருப்பதில் ஆச்சர்யம் ஏது? 


      உள்ளம், மொழி எனும் இரண்டு பொருண்மைகளும் சமூகத்தை மையப்படுத்தியதாக நகர்வதில் சில இடர்பாடுகள் உண்டு. உள்ளம், சமூகம் ஆகியன மொழிக்கு எப்படி பங்களிக்கிறது என்ற கோணத்தில் அணுகினால் தாய்மொழி என்ற கருத்தாக்கம் இரண்டிற்கும் நடுவில் நிற்கிறது. தாய்மொழியில் மனிதன் சிந்திக்கிறான் என்கிற கருத்து நெடுங்காலமாக வலுவுடன் இருக்கும் சூழலில் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ அவ்வளவு பொய்யும் இருக்கிறது என்கிற எதிர்கருத்தை காரணத்துடன் இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. சிந்தனை என்பது மனம்(உள்ளம்) சார்ந்தது. மனம் சார்ந்த சிந்தனையின் மொழியைச் சமூகம் தீர்மானிக்கிறது. “சமூகப் பழக்கம் மனப்பழக்கம் என்றாகித் தாய்மொழியைப் பின்னுக்குத் தள்ளி தமிழ்மொழி முன்னுக்கு வந்து விடுகிறது.” இங்கு தமிழ் மொழி என்பது சிந்தனை மொழியைக் குறிக்கிறது. “சிந்தனை மொழியாக சமூகமொழி உள்ளது.” சிந்தனை மொழியைத் ‘தன்மொழி’ என்றும் கூறலாம். சுந்தர ராமசாமி “சிந்தனைக்கும் பிரச்சினைக்கும் இடையே என்ன உறவு இருக்கிறதோ அந்த உறவுதான் சிந்தனைக்கும் மொழிக்கும் இடையே இருக்கிறது. சிந்தனை கூர்மைப்படும்போது மொழி துல்லியப்படுகிறது. துல்லியப்படும் மொழி சிந்தனையைத் தேக்குகிறது.” என்றும் “சிந்தனையின் தளத்தில் மொழி ஆக்கம் பெறுவதற்குப் பதில் பழக்கத்தின் தளத்தில் அது தேய்ந்து போகிறது.” என்றும் கூறுகிறார். சுந்தர ராமசாமியின் கருத்து தன்மொழிக்கு ஒத்துப் போவதாகவே உள்ளது. மனிதனின் சிந்தனை வளத்திற்குள் எத்தகைய சொற்கள் தேக்கமடைந்துள்ளதோ அந்த சொற்கள் மட்டுமே கருத்துகளுக்குள் இடம்பெறுகிறது. இது ஒருவித தேக்க நிலையே ஆகும். கட்டுரையிலுள்ள தன்மொழி சார்ந்த கருத்தை சமூகப் பரவலையொட்டி “தமிழகத்தில் பரவலாக வாழும் தெலுங்கு பேசும் மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழரோடு கலந்துவிட்டவர்கள். இவர்களில் பலருக்கு தெலுங்கு எழுதப் பேச தெரியாது. இவர்கள் பல்வேறு சாதியினராக இருக்கின்றனர். இவர்கள் தம்மைத் தமிழரென்று கருதினாரேயன்றி தெலுங்கு தேசிய இனமாகக் கருதவில்லை. அதற்கான தேவையும் இவர்களுக்கு இல்லை. சமூகம் மற்றும் உளப்பகுப்பாய்வியல் அடிப்படையில் இவர்கள் தமிழர்களாகவே ஆகிவிட்டார்கள். இவர்களில் பலர் தமிழின அரசியல் இயக்கங்களிலும் கலை இலக்கியத் துறைகளிலும் முதன்மையாகப் பங்காற்றியுள்ளனர்.” என்கிற  குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம் நூலில் இடம்பெற்றுள்ள பா.கல்யாணி எழுதிய முன்னுரையின் ஒரு பகுதியை வைத்துப் புரிந்து கொள்ளலாம். மனப்பழக்கம் என்பது இப்படியான மாற்றத்தை உருவாக்க வல்லதாக அமைகிறது. “உயிரியல் இயக்கம் என்கிற வகையிலும் குழந்தை கருப்பையில் இருக்கும் போதே தாயின் பேச்சைக் கேட்கிறது. ஒலி அலைகளை உள்வாங்குகிறது. கருவின் எட்டாவது மாதத் தொடர்ச்சியிலேயே குழந்தையின் மூளை முழு வளர்ச்சி அடைந்து விடுவதால், இது இயல்பாகவே குழந்தையின் மூளையில் பதிவும் ஆகிவிடுகிறது. பிறந்து வளரும் குழந்தை இப்பதிவின் அடிப்படையிலேயே கல்வி பயில்கிறது அல்லது குழந்தையின் கல்விக்கு இப்பதிவே அடிப்படையாய் அமைகிறது. அதாவது கருவிலேயே குழந்தையின் மொழிக்கான உயிரணுக் கட்டமைப்பு உருவாகிவிடுகிறது என்பதே இதன் பொருள். எனவே, இதற்கு இசையவே குழந்தைக்கு கல்வி தரவேண்டும். அப்படித் தரும்போதே குழந்தையின் அறிவாற்றல் முழுமையாக வெளிப்படவும் முடியும்.” என்கிறார் இராசேந்திரசோழன். இதில் குழந்தை கருவாகி சிசுவாகும் காலம் முதலே மொழியை மூளையில் சேகரமாகி பதிவு செய்யப்படத் தொடங்குகிறது என்கிற தகவல் கிடைக்கிறது. சேகரமாகும் மொழி தாய்மொழியா? தன்மொழியா? என்கிற இடம் கவனிக்கப்படவேண்டியவை. குழந்தை கருப்பையில் இருக்கும் போது தாயின் தன்மொழி குழந்தைக்கு தாய்மொழியாகக் கிடைக்கிறது என்றே முடிவுக்கு வரலாம்.


     இந்த மனப்பழக்கம் மனிதனுக்கு மொழி வழி அமைகிறதென்றால் பிற உயிர்களுக்கு எண்ணத்தின் வழியே அமைகிறது. கொன்ராட் லொரன்ஸ் எனும் உயிரியல் அறிஞர் 1975ஆம் ஆண்டு நிகழ்த்திய ஆய்வு உயிரினங்களிடம் மனப்பழக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சான்றாக அமைகிறது. வாத்து முட்டையைச் சேகரித்து அந்த முட்டைக்குள் இருக்கும் உயிரியிடம் மொழிவழித் தொடர்பு கொண்டு மனிதர்கள் வாத்தின் தாயாக தங்களை முன்னிறுத்த முடியும் என்கிறது லொரன்ஸின் ஆய்வு முடிவு. இதன்படி மனப்பழக்கம் என்பது மொழியில் அல்ல எண்ணத்திலேயே மாற்றத்தைக் கொடுக்கவல்லது எனத் தெரிய வருகிறது. மிஸ் யூ என்கிற சொல்லை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க முடியாது. அதற்கு எத்தனை மொழிபெயர்ப்பு வந்தாலும் அது உணர்ச்சியை அல்லது எண்ணத்தை முழுமையாக கடத்துவதாக அமையாது. இந்த வகைப்பட்ட மொழி “தன்மொழி”(Self Language) எனப்படுகிறது. இந்த தன்மொழி சமூகத்தால் கொடுக்கப்படும் மொழியாக அமைகிறது. மனிதன் பயன்படுத்துவது குறியீட்டு மொழியென்றால் லக்கான் “சுட்டுகின்ற குறியீட்டு முறைமை என்பது (symbolic order) என்பது சமூகத்தில் நிலவி வரும் குறியீடுகளின் ஒழுங்கைக் குறிப்பதாகும்.” சமூகத்தில் நிலவி வரும் குறியீட்டு மொழி தன்மொழி ஆகிறது. “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் 

இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாரதியாரின் வரியை தன்மொழிக்கான உதாரணமாக கட்டுரை கொண்டுள்ளது. இதில் தாய்மொழி எனக் குறிப்பிடாமல் தமிழ் மொழி என்று மொழியின் பெயரை பாரதியார் குறிப்பிட்டிருப்பது தன்மொழிக்குரிய சரியான எடுத்துக்காட்டு ஆகிறது. தாய் மொழிவழிக் கல்வியை விட தன்மொழி வழிக் கல்வியை சிறப்பு எனக் கூற வரும் இக்கட்டுரையின் கருத்து கல்வியை மனவியல் அடிப்படையில் அணுகுகிறது. மனவியல் அடிப்படையில் அணுகும் போது மொழியில் ஏற்படும் தேக்கநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இதனை பண்பாட்டியல் அணுகுமுறை மற்றும் சமூகவியல் அணுகமுறை கொண்டு அணுக வேண்டிய தேவையிருப்பதை நாம் உணர வேண்டும். தன்மொழி என்ற குறிப்பானிலிருந்து சமூகமொழி என்ற குறிப்பான் சங்கிலியைக் கட்டுரை கோடிட்டுக் காட்டும் பகுதி முக்கியமானதாகும். அதேசமயம் தன்மொழி என்பது ஒரு மொழியாகத் தான் இருக்க வேண்டுமா? அல்லது பல்வேறு மொழிகளிலிருந்து எடுத்தாளப்படும் சொற்களின் கோர்வைகள் தன்மொழி ஆகுமா? என்கிற கருத்து கட்டுரைக்குள் இல்லை. 


      தன்மொழியை சிந்தனை மொழி என்று எடுத்துக்கொண்டால் அது தனித்த ஒரு மொழியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. பல்வேறு மொழிகளின் கோர்வையாகவே இருக்க முடியும். தன்மொழியைச் சிந்தனை மொழி என்கிறோம். அப்படியானால் சிந்தனை மொழி எப்படியானது என்கிற புரிதல் தான் தன்மொழியின் விளைச்சலுக்கான விதை எதுவெனக் காட்டும். “நனவிலிக் குறிப்புகளால் உருவாக்கப்படுவது தான் சிந்தனை ஆகும். இந்த நனவிலிக் குறிப்பான்கள் நனவு நிலையில் பேச்சுகளாக வெளிப்படுகின்றன.” நனவிலியில் வரும் எண்ணங்களைக் கனவுகள் எனலாம். ஆழத்து உளவியல் வழிக் கூறின், கனவில் நாம் பேசுகிற மொழியே ‘தன்மொழி’ ஆகும்.” சுந்தர ராமசாமி “அதிகாரத்தின் கட்டுமானத்தில் கற்பனை மொழி ஆற்றும் பங்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. கற்பனை என்ற அழகான சொல்லை நாம் கீறிப் பார்த்தால் அதற்குள் பொய், ஜோடனை, புனைவு, திரிபு போன்ற பல தந்திரங்களைப் பார்க்க இயலும். அதிகாரம் என்பது கூட்டு மனத்தின் செயல்பாடும் தான். கூட்டு மனத்தை இயக்க வைக்கும் முக்கியமான சக்தி மொழி.” என்றும் “எல்லாச் சமூகங்களிலும் சிந்தனையாளர்கள் தான் அதிகாரத்தைச் சமூக நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்துபவர்களைக் கட்டுப்படுத்தும் மொழியை மக்களுக்கு உருவாக்கித் தருகிறார்கள். மக்கள் படும் இன்னல்களின் சாராம்சங்களிலிருந்தே இந்த மொழி உருவாக்கப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது சிந்தனை மொழி என்பது உண்மையில் மக்களின் மொழி தான். சமத்துவத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் இடையே உருவாக்கப்படும் சுவர்களைத் தகர்க்க முயலும் மொழி அது. நம் இன்றைய மொழி கனவு சார்ந்தது. சிந்தனையின் திட்பம் இல்லாதது. பழைமையைப் பேணுவது. மூட நம்பிக்கைகளை வளர்ப்பது. அதனால் அதிகாரத்துக்கு உபயோகமானது. கனவு மொழியிலிருந்து சிந்தனையின் மொழியை உருவாக்க முயல்பவர்கள் தான் உண்மையில் இன்றையத் தமிழ்ப் படைப்பாளிகள்.” என்கிறார். இக்கருத்தின் வழி கட்டுரையை எளிமையாக புரிந்து கொள்ளலாம். நனவிலி மனத்தில் கனவு இருக்கிறது. நனவிலி குறிப்புகள் பேச்சாகிறது. பேச்சு என்பது படைப்பு மொழியல்ல. படைப்பு மொழி உருவாக கருத்தும் சிந்தனையும் தேவைப்படுகிறது என்பதே கட்டுரை உணர்த்தும் கருத்துகள் ஆகும். 


      பொதுவாக ஒரு மொழியை கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்கிற நான்கு நிலைகளில் அணுகவேண்டியுள்ளது. கேட்டல், பேசுதல் எனும் இரண்டு வினைகளை உளமொழி எனலாம். படித்தல், எழுதுதல் ஆகியனவற்றை சிந்தனை மொழி அல்லது பிழைப்பு மொழி எனலாம். உளமொழி சிந்தனை மொழியாகும் விதத்தை விரிவாக முன்வைக்கும் வகையிலேயே கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. மொழி, இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியனவற்றை உள்ளடுக்குகளாக இக்கட்டுரை அணுகுகிறது. “மனிதனின் ஆகச் சிறந்த படைப்பு மொழி, மொழியின் ஆகச் சிறந்த படைப்பு இலக்கியம், இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பு மொழிபெயர்ப்பு.” என்ற கருத்தினை வரிசை முறைப்படி அறிவது புரிதலை மேம்படுத்தும். “மொழி என்பது அகநிலையின் இயங்கு சக்தி ஆகும்.” இயங்கு சக்தியாகிய மொழியை நாட்டார்(பேச்சு) மொழி மற்றும் இலக்கிய மொழி என்ற இரண்டு நிலைகளில் அணுக வேண்டிய பார்வை மறைமுகமாக முன்வைக்கப்பட்டுள்ளது. மொழி, இலக்கியம், மொழிபெயர்ப்பு எனும் மூன்றனுள் முதலாவது இருக்கும் மொழியைக் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தாயிற்று. இரண்டாவது இருக்கும்  இலக்கியம் என்பதை கலை என்ற பார்வையிலும் அணுக வேண்டியுள்ளது. இலக்கியத்தைச் சிந்தனையின் அல்லது நாட்டார் மொழியின் மொழியாக்கமாகக் கருதலாம். “மனிதனின் கலை படைப்புகள் யாவும் ‘போலச் செய்தலின்’ விளைவுகளே” என்கிறார் ப்ளேட்டோ. போலச் செய்தலும் போலச் செய்தலின் வழியே சற்று முரண்பட்டு இயங்குவதும் கலை என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ப்ளேட்டோவின் கருத்துப்படி கலை ‘நிஜத்தின் நிழல்’ ஆகிறது. ப்ளேட்டோவின் வழிநின்று இக்கட்டுரை மொழிபெயர்ப்பை ‘நிழலின் நிழல்’ என்கிறது. “கலை என்பது மூலப்பொருளுக்கு ‘படியெடுக்கும்’ ஒரு மாயவித்தை” என்றும் ப்ளேட்டோவின் கருத்து வேறொரு நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது. படியெடுத்தலும் போலச் செய்தலும் ஒன்றல்ல. போலச் செய்தல் என்பது ஓவியம் போன்றதெனில் படியெடுத்தல் படம் பிடிப்பது போன்றதாகும். படியெடுத்தலை எழுத்துப் பெயர்ப்பு என்று வகைபடுத்தி கல்வெட்டு, சுவடிகளை எடுத்துக்காட்டாக கட்டுரை முன்வைக்கிறது. கட்டுரையின் படி ப்ளேட்டோவின் கருத்தாக எடுத்தாளப்படும் மேலேயுள்ள இரண்டு கருத்துகளும் ஒரே கருத்து தான் எனில் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை, மொழியாக்கம் நடந்துள்ளது. “போன்மைப் பண்பு குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்குகிறது. பிறரைப் பார்த்து அவருடைய நடை, பேச்சு முதலியவற்றை குழந்தை கற்றுக்கொள்ளுகிறது. இவ்வாறு, ஒன்றைப் பார்த்து அதைப் போலவே செய்யக் கற்றுக்கொள்வதில் மனிதன் பிற உயிர்களை விடச் சிறந்து விளங்குகின்றான். மனித அறிவுக்குத் தொடக்க வாயிலாக அமைவதும் இப்போன்மைப் பண்பு தான்.” என்கிறார் அரிஸ்டாட்டில். போன்மைப் பண்பாகவே மொழிபெயர்ப்பைக் கட்டுரை கையாள்கிறது. இலக்கியத்தில் மொழிபெயர்ப்பைத் தவிர்த்து வேறு எந்த வகையிலும் போன்மைப் பண்பைப் பொறுத்த முடியாததால் மொழிபெயர்ப்பு ஆகச் சிறந்த இலக்கியம் எனச் சொல்லப்படுகிறது. 


     மூன்றாவதாக மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பை இலக்கியத்தின் ஆகச் சிறந்த கலை எனச் சுட்டும் கட்டுரை மற்றொரு இடத்தில் “மொழிபெயர்ப்பானது இலக்கியத்துக்கு இணையாக விளங்குகின்ற ஒரு படைப்புக் கலை” என்கிறது. இந்தக் கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக வரலாறு இலக்கியம் என்ற இரண்டும் மொழிபெயர்ப்பு எனப்படுகிறது. “வரலாறு என்பது சம்பவங்களின் மொழிபெயர்ப்பு” என்றும் “இலக்கியம் யதார்த்தத்தின் மொழிபெயர்ப்பு” என்றும் சொல்லப்படுகிறது. பின் இலக்கியம் மொழியாக்கம் எனப்படுகிறது. “இலக்கியம் என்பது யதார்த்தத்தின் அல்லது கற்பனையின் முதல் கட்ட மொழியாக்கம் என்றால் மொழிபெயர்ப்பு என்பது இரண்டாம் கட்ட மொழியாக்கம்” எனச் சொல்லப்படுகிறது.  மொழிபெயர்ப்பும் மொழியாக்கமும் ஒன்றல்ல. மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு மற்றும் மொழியாக்கம் ஆகியவற்றோடு தழுவல் என நான்கு நிலைகளைக் கட்டுரை ஆங்காங்கே தொட்டுக் காட்டுகிறது. மொழிபெயர்ப்பு Translation எனவும் மொழியாக்கம் Transcreation எனவும் ஒலிபெயர்ப்பு Transliteration எனவும் எழுத்துப்பெயர்ப்பு Transcription எனவும் அழைக்கப்படுகிறது. மொழித்துறை தாண்டி Trans என்ற சொல், Transfer, Transformer, Transgender என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக Trans என்பது மாற்று எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இதன்படி மொழியாக்கம் என்பது மறுஆக்கம் ஆகும். இந்த மறு ஆக்கம் சொற்களுக்கும் புனைவற்ற சிறிய பத்திகளுக்கும், புனைவுநூலின் கருத்தையொட்டியும் கையாளப்படும் போது, மொழியாக்கம் எனவும், முழுமையான புனைவு நூலில் அதிகப்படியான சுயக்கருத்துகளை கையாண்டு மூலத்தை சிதைக்கும் போது தழுவல் என்றும் கொள்ளப்படுகிறது. என்ப, மொழிப, என்மனார் புலவர் முதலான தொல்காப்பியத்தில் இடம்பெறும் சொற்களை தழுவல் சொற்கள் எனக்கூறி மேற்கோள்களைச் சுட்டும் சொற்களை வைத்து நூலை வழிநூல் என முடிவு செய்யும் பாங்கில் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. 


      “மொழியில் மனிதன் சிந்திக்கிறான் எனில், ஒவ்வொரு சிந்தனைக்கும் பின்புலமாக. மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் உள்ளது.” இக்கட்டுரையின் மையம் உள்ளத்தில் எழும் தன்மொழியை மொழிபெயர்ப்பாகக் கூறுவதே ஆகும். மேலும் மொழிபெயர்ப்பு பற்றிய பொதுவான வரையறைகள் மற்றும் விளக்கங்களை இந்த கட்டுரை உள பகுப்பாய்வு நெறிமுறைப்படி கட்டுடைக்கிறது. சான்றாக, “பொதுவில் மொழிபெயர்ப்பு என்றால் அறிவு சார்ந்த ஒன்று எனக் கருதுவோம். ஆனால், இது உளம் சார்ந்த படிமுறை என்பது தான் உள மெய்ம்மை.” என்கிற கருத்தைக் கூறலாம். தன்மொழி சார்ந்த மனத்தை மொழி மனமாகவும் மொழிபெயர்ப்பு மனமாகவும் கூறி சிந்தனைக்குள் வரும் எண்ணங்களை எழுத்தாகவும் சொல்லாகவும் வெளிக்கொணர்வதே மொழிபெயர்ப்பெனக்  கூறும் கட்டுரை அதன் செயல்பாட்டு நெறிகளையும் விளக்குகிறது. “தன்மொழி சார்ந்த மொழிபெயர்ப்புகள் நனவிலியிலேயே நடக்கின்றது. எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் மொழியாகப் பெயர்க்கப்பட்டு ஆழ்மனத்துள் அமைந்து விடுவதால் மொழிதல் ஒருவிதத்தில் மொழிபெயர்த்தல் என்றாகிறது.” பேசுவதையே மொழிபெயர்ப்பு என்று சொல்லும் இந்தக் கட்டுரையின் கருத்துக்கு வலுசேர்ப்பதாக “வான் ரமோன் ஹிமினெஸ் (1881-1958) ஓர் அறிமுகம்” என்ற பிரம்மராஜனின் கட்டுரையும் மொழிபெயர்ப்பு கவிதைகளும் இருக்கிறது. “மேன்மையான யதார்த்தத்தின் சூழ்நிலைமை தான் கனவு” என்கிறார் ஹிமினெஸ். மேலும் கனவில் வெளிப்படும் மொழியைக் குறித்து “நாம் கனவுகளிலிருந்து வரும் சொற்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கைப்பற்றி விட்டோமானால், அவைதான் மிக மெய்ம்மை மிக்கவையும் மிகச் சிறந்தவையும் ஆகும்.” என்று கூறுகிறார். பிரம்மராஜன், “கனவின் மொழியை யதார்த்த நிலைக்கு மொழிபெயர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவராக இருந்தவர் ஹிமினெஸ்” என்கிறார். ஸ்பானிய கவிஞரான இவரது கருத்தையும் இவரைப் பற்றிய கருத்தையும் அவருடைய இரண்டு கவிதைகளின் வழியாகப் புரிந்து கொள்ள முடியும். இரண்டு கவிதைகளும் மொழி, வார்த்தை மற்றும் பெயரை முதன்மையாகக் கொண்ட கவிதைகள் ஆகும். கவிதைகளைக் கட்டுரையின் பின்னே கொடுத்துள்ளேன். “ப்ராய்டின் கனவுப் பகுப்பாய்வு ஒருவிதத்தில் ‘மொழி ஆய்வு’ போன்றது. இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் லக்கான்” என்று கனவையும் மொழியையும் முடிச்சுப் போட முனைந்துள்ள தி.கு.ரவிச்சந்திரனின் இந்தக் கட்டுரை மொழியை அணுகும் பாணியில் வித்தியாசமான முறைமையைக் கையாண்டுள்ளது. 


வான் ரமோன் ஹிமினெஸ் கவிதைகள்

நுண்ணறிவே எனக்குத் தா


நுண்ணறிவே எனக்குத் தா

வஸ்துக்களின் மிகச்சரியான பெயரை

எனது வார்த்தையே

அந்த வஸ்துவாகவே ஆகட்டும்

எனது ஆன்மாவினால் இரண்டாம் தடவை சிருஷ்டிக்கப்பட்டு

வஸ்துக்கள் பற்றிய அறிதலற்ற அனைவரும்

என் ஊடாய்

அவற்றை அடையட்டும்

வஸ்துக்களை மறந்த அனைவரும்

என் ஊடாய் அவற்றை அடையட்டும்

வஸ்துக்களை நேசிப்பவர்களும் கூட

என்னூடாய் அவற்றைச் சென்றடையட்டும்…

நுண்ணறிவே, எனக்குத் தந்தளி

வஸ்துக்களின் மிகக் கச்சித பெயரை, மற்றும்

உன்னுடையதை

மற்றும் அவர்களுடையதை, மற்றும் என்னுடையதை‌.

*******

பெயர்களிலிருந்து பெறப்பட்ட பெயர்


உனது இடத்தில் நான் உனக்கொரு உலகினைப் படைத்திருப்பேனாயானால்

நீ நம்பிக்கையுடன் அந்த இடத்திற்கு வந்துவிட்டாய்

மேலும் அதன் பொருட்டு நீ வந்துவிட்டாய், எனது தஞ்சமாய்

காரணம் எனது முழு உலகுமே உனது நம்பிக்கை தவிர வேறு ஒன்றுமில்லை

நான் சேகரித்துச் சேமித்துக்கோண்டிருந்தேன் எனது நம்பிக்கையை 

மொழியில், பேசப்பட்ட ஒரு பெயரில், எழுதப்பட்ட ஒரு பெயரில் 

நான் சகலத்திற்கும் ஒரு பெயர் தந்திருந்தேன்

நீ எல்லாப் பெயர்களின் இடங்களையும் எடுத்துக் கொண்டாய்

இப்பொழுது எனது இயக்கத்தைத் தடுத்து நிறுத்தவியலும்

எனது தொடர்ச்சியான வாழ்தலிலும் இருத்தலிலுமாய் இருந்த நெருப்பினுள்

காற்றினால் சூழப்பட்டு அதுவே நீலநிற நெருப்பாகித்

தீப்பிழம்பு மறுபடியும் சிவந்த நெருப்பினுள் லகானுக்குள் வரும்போது

திடீரென எங்கோ தடுத்து நிறுத்தப்பட்ட

நானே எனது கடலாக இருக்கிறேன்

எதுபற்றி நான் பேசிக்கொண்டிருந்தேனோ அந்தக் கடல்

ஆனால் கனமில்லை

ஒளியால் நிரப்பப்பட்ட அறிதலின் அலைகளின் இறுக்கமாய் 

சகலமும் நகர்த்து கொண்டிருக்கின்றன மேல்நோக்கி, மேல்நோக்கி

பிரபஞ்சத்திற்கென நான் அளித்த அனைத்துப் பெயர்களும் 

கடவுளால் படைக்கப்பட்டவை, மீண்டும் படைக்கப்பட்டு, மீண்டும் படைக்கப்பட்டவை 

அருளால்

வலிமையால் அல்ல

பெயர்களிலிருந்து பெறப்பட்ட பெயர் 


துணை நின்றவை:


உளமொழி பெயர்ப்பியலும் மொழிபெயர்ப்பு உளமும் - தி.கு.இரவிச்சந்திரன்

https://manalveedu.org/%e0%ae%89%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a/

  • இலக்கியக் கலை -அ‌.ச. ஞானசம்பந்தன், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு- திசம்பர், 1993.

  • குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம்- அ. மார்க்ஸ், கோ. கேசவன், மக்கள் கல்வி இயக்கம், பிப்ரவரி 1997.

  • நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும்?, இராசேந்திரசோழன், உதயம், ஜூலை 2003.

  • இறந்த காலம் பெற்ற உயிர், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், ஆகஸ்ட் 2003.

  • தொடர்பியல், சமூகம் வாழ்க்கை- க.பூரணச்சந்திரன், அடையாளம் பதிப்பகம், 2011.

  • வான் ரமோன் ஹிமினெஸ் (1881-1958) ஓர் அறிமுகம் கட்டுரையும் மொழிபெயர்ப்பும்: பிரம்மராஜன், வான் ரமோன் ஹிமினெஸ் கவிதைகள், மணல்வீடு இதழ்-48, ஆகஸ்ட், 2023. https://manalveedu.org/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%86%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4/

    

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு