அரா கவிதைகள்

அரா கவிதைகள்

சகல குறும்புத்தனங்களுக்கும்
ருவம் கொடுக்க முயன்றால்
அவளை அழகாக வரைந்து விடலாம்

ஓயாமல் ஓடும் கால்களும்

எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும்

நீள் வடிவ முகமும்

திடீரென கீச்சிட்டு ஒலித்து

திருப்பும் குரலும்

இன்னும் கேட்கிறது


கேட்டலின் நிறுத்தமே

பித்துப் பிடித்து குமுறும்

மனத்தின் விடுதலை...

மாற்ற நினைக்கும் ஏகாந்தமும்


_______________________________


அகப்பாடல்களை

பேருந்தில் கேட்கும் போதும்

பேப்பரில் பார்க்கும் போதும்

எனது அந்தரங்கம் திறக்கிறது


அதற்குள் இருக்கும்

உன்னுடனான பேச்சுகள்

பேரிரைச்சலாகி

கொல்ல முந்துகிறது


எப்படி நான் அகத்தின்

உலக இருப்பை

அழிப்பது?


பரவாயில்லை ..


அகத்தின்

கதவுக்கு பின்னே இருக்கும்

அந்தரங்கத்தினை

எப்படி திறக்காமலிருப்பது?


எல்லாவற்றையும் பூட்டிவிட்டு

துறவலைத் தூக்கி

வானத்தின் கீழ்

பறந்து கொண்டிருக்கும்

கடலுக்குள்

போட்டுவிட்டு செல்

பாசமே ..


_________________________________


கருந்திராட்சை


இரண்டே இரண்டு கருந்திராட்சை பழங்கள்

வெண்மைக்குள் சுழன்று வந்து

பிழிபட்டு வழிந்த நீரின்

வைன் போதை 

இன்னும் தீரவில்லை


தீரும் நொடிக்காக 

கடிகாரம் நிற்குமென

நான் சாலையோர பாலத்தடியில் 

உட்கார்ந்து

மின்னி மறையும் நட்சத்திரத்தை 

பார்த்துக் கொண்டிருக்கிறேன்..


அதுவும் மறையட்டும்..

திராட்சை பழமும் சாறு வடியாமல்

போதை தராமல் போகட்டுமென்ற

வேண்டுதல் ஒன்றே மிச்சமாயிருக்கிறது


______________________________________


பொத்தைகளுக்குள் தூக்கம்


பொத்தைகளுக்குள் அடங்கிய

போதையை அனுபவித்து

மல்லாந்து கிடந்தபோது


அந்தரத்தில் 

பழுப்பு நிறம் படர்ந்த

மின்காற்றாடி மட்டுமே

கண்ணில் படுமாறு சுற்றியது..


சுற்றித்திரிந்து வந்து

சுற்றிக்கொண்டிருந்த கண்கள்..

துல்லியமாக மையமிட்டு பார்க்க

ரெகுலேட்டர் துணையின்றி

கண்களின் பிரம்மையில்

விசிறியின் வேகம் பெருகியது..


பெருகி நின்ற வேகம்

காற்றோடு கழிபட்டு

குறைய குறைய

நானும் தூங்கிப்போனேன்..


நாளும் விழாவும்

நகர்ந்து கொண்டிருந்தது..


___________________________________


காணாமல் போனாய் -நீ

காணாமல் போனாய் என

பயங்கர சப்தமாக

அசீரிரி ஒலித்தது

ஒலி வலது காதில்

அழுந்தினாலும்

இடது பக்கமாக தான்

ஏறி இறங்கியது..

துடிதுடித்த உதடுகள் இரண்டும்

நாராசமாய் அதிர

தேடினால் தானே

காணாமல் போய் இருப்பேன்

என்ற குற்றொலி மட்டும்

நாக்கிலிருந்து சுழன்று விழுந்தது


____________________________________


உடையும் கதைகள்


துளி துளியாய் இறங்கும்

சாரலுக்குள் ஒளிந்திருக்கும்

கதைகள் எல்லாம்

டப் டப்பென பொதியில்

தவறி விழுந்து

உடைகிற எல்லா நொடியிலும்

நீர் கசிகிறது

பல நிறத்தில்


உடையும் கதைகளுக்குள்

தங்கியிருந்த கதாபாத்திரங்கள்

நிர்க்கதியாக மீண்டும் மீண்டும்

வானைப் பார்த்து

மேலே செல்ல துடித்தால்

விழுந்துடைந்த கதையில் 

பொறிக்கப்பட்ட

சொற்கள் எல்லாம் ?


______________________________________



சாய குஞ்சுகள்


சாயம் பூசிய கோழிக்குஞ்சுகள்

குலுக்கிப் போட்ட

லாட்டரி சீட்டில் விழுந்தன..


லாட்டரியில் விழுந்த முதலாம்

குஞ்சினை பறந்து வந்த

காக்கை தூக்கியது..


இரண்டாம் குஞ்சினை

ஆதவனின் கதிர்கள் ஆட்டமின்றி

கல்லின் சூட்டில் காயவிட்டது..


லாட்டரிக்காரன் கூடையில்

மிச்சமிருந்த குஞ்சுகள்

கொக்கரிக்க


மிதிக்கும் வேகத்தில் வண்டியும்

ஹூம் ஹூய் என்று

ஓசை தந்து போனது..


______________________________________

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு