கவிதைகள் - முதல் பருவம்

  கவிதைகள் - முதல் பருவம்

கவர்ச்சி -ஆல்யன்

தீம்பால் தீண்டிய

முலைகளில் மீது கவர்ச்சி கொண்டால்

கிழித்து

வெறிநாய்களுக்கு வீசி விடுகிறேன்


வளைவுகளுடைய சிற்றிடையின் மீது

காமுக பார்வை சென்றால்

தீயை மருதாணியாய் 

பூசுகிறேன்

ரணங்களைக் கண்டு

கவர்ச்சி கொள்ளுங்கள்


கரிய நூல்களில் நுழைந்து

நுகர்வது இன்பமென்றால்


அழையா விருந்தாளி அளிக்கும்

செந்தேனை தேய்த்துக் கொள்கிறேன்

குடல் குமட்டும் ஓடி 

ஒளிந்து கொள்ளுங்கள்


நடையில் எடைபோடும் நீவிர்

தாயிடம் தராசை

உயர்த்தி பாரீர்


உயர்ச்சி மிகுந்த

குரங்காகினால்

உங்களின் பயிரை

நீங்களே மேய்ந்துவிடுங்கள்

_____________________________________________


தேவதைகள் சொல்லிக்கொண்டு

வருவதில்லை

-அசோகமித்திரன்


தேவதைகள் வருவதேயில்லை

-சோகமித்திரன்


தேவதைகள் சொல்லிக்கொண்டு

போவதில்லை

-அனுபவமித்திரன்


தேவதைகள் போவதேயில்லை

-தேவதைமித்திரன்


                             -தமிழ்பாரதன்

_____________________________________________


பேனாவாம் பேனா -திரமிளன்


தற்குறிகளின் மேலுள்ள 

பொறா”மை”யில்

தற்பெரு”மை”யில்

பட்டினியால் சாகும் 

என் மக்களின் நிலை”மை”யில்

ஆணவத்தில் சுற்றித்திரியும் 

ஆண்”மை”யின் பிடியில்

சிக்கித்தவிக்கும் பெண்”மை”யின் 

நிலை”மை”யை புரிந்துக்கொள்ளா 

அரு”மை”யான ஆட்சியில்

சாதிய வேற்று”மை” பார்க்கும் 

அமைச்சரவையில்

சாதிப் பெரு”மை” பேசும் 

அமைச்சர் முன்னிலையில்

புது”மை” செம்”மை” உண்”மை” 

எனச்சொல்லி மக்களை

ஏழ்”மை”யும் வறு”மை”யும் ஆக்கிய 

பெரு”மை” உம்”மை”யே வந்துசேரும்

பழ”மை” மாறிய அரசே 

பண்பாடு நிரம்பிய இங்கே - எழுக

வேணா

வே வேணாம் 

கடலின் நடுவே

பேனாவாம் பேனா.

_____________________________________________

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு